தலைச்சுற்றல் பாதிப்பை வராமல் தற்காத்துக் கொள்ள இயலுமா?
Posted on 04/03/2022
இன்றைய திகதியில் எம்மில் பெரும்பாலானவர்கள் கொரோனாத் தொற்று பாதிப்பு என்ற உலகளாவிய அச்சுறுத்தலுக்கு பிறகு தங்களின் ஆரோக்கியம் சார்ந்த விடயங்களில் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறார்கள். கொரோனாத் தொற்றிற்கு பிறகு தங்களின் வாழ்க்கை நடைமுறையையே மாற்றியமைத்துக் கொள்வதிலும் அக்கறைக் காட்டி வருகிறார்கள். ஏனெனில் கொரோனாத் தொற்றிற்கு பிறகு ஏராளமான பக்கவிளைவுகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள். அதில் ஒன்று தசைச்சுற்றல். இந்நிலையில் தலைச்சுற்றல் எனும் பாதிப்பு குறித்தும், இதனை வராமல் தற்காத்துக் கொள்ள இயலுமா? என்பது குறித்தும், இதற்குரிய சிகிச்சை குறித்தும் அறிந்துக்கொள்வதற்காக சென்னையைச் சேர்ந்த மூளை நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர். S.வினோத் கன்னா M.D., D.M., மூளை நரம்பியல் நிபுணர் சந்தித்தோம்.
தலைச்சுற்றல் வருவதன் காரணம் என்ன?
தலைச்சுற்றல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. எம்முடைய உடலில் ரத்தச் சர்க்கரையின் அளவு மற்றும் ரத்த அழுத்தத்தின் சமச்சீரற்ற தன்மையால் தலைச்சுற்றல் ஏற்படலாம் மைகிரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியின் காரணமாகவும் தலைச்சுற்றல் ஏற்படும். காலை உணவைத் தவிர்த்தாலோ, ஆறு மணி நேரத்திற்கு மேல் தண்ணீர் கூட அருந்தாமல் இருந்தாலோ தலைச்சுற்றல் ஏற்படக்கூடும். எட்டு மணித் தியாலத்திற்கு மேலான நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் போதும் தலைச்சுற்றல் ஏற்படக்கூடும். மேலும் வேறு சிலருக்கு காரணங்கள் இல்லாமல் கூட தலைசுற்றல் ஏற்படக்கூடும்.
சிலர் கண்ணைத் திறந்தால், இந்த உலகமே சுற்றுவது போல் இருக்கிறது என்பார்கள். வேறு சிலர் தலையை மேல் நோக்கி அண்ணாந்து பார்த்தால், தலை சுற்றுகிறது என்பார்கள். வேறு சிலர் தரையை நோக்கி குனிந்து பார்க்கும் பொழுது, தலைப்பகுதி முழுவதும் சுற்றுகிறது என்பார்கள். சிலர் கண்ணை திறந்து பார்க்கவே பயமாக இருக்கிறது. வாந்தி, குமட்டல் உணர்வும் இருக்கிறது என்பார்கள். இத்தகைய பாதிப்புகள் எம்மை அச்சுறுத்த கூடியவை. இருப்பினும் இத்தகைய பாதிப்பு எந்த தருணங்களில், எத்தகைய வகையில், எவ்வளவு கால அவகாசத்திற்கு ஏற்படுகிறது என்பதை துல்லியமாக அவதானித்து மருத்துவரிடம் எடுத்துரைத்தால், அவர்கள் இதற்கான முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.
ஒவ்வொரு வகையினதான காரணங்களுக்கு வெவ்வேறு வகையினதான தலைச்சுற்றல் பாதிப்பு ஏற்படும். பச்சிளங்குழந்தைகளை தவிர்த்து, ஆண்-பெண் என அனைவருக்கும் இத்தகைய பாதிப்பு, எந்த வயதிலும் ஏற்படலாம்.
ஆனால் தலைச்சுற்றல் ஏற்படுவதற்கு முழு முதற் காரணம் எம்முடைய காதுகள் தான். காதுகள் கேட்கும் திறனுக்கான பணியை மட்டும் மேற்கொள்ளாமல், எம்முடைய உடல் சமநிலையில் இருப்பதற்கான பணியையும் மேற்கொள்கிறது. குறிப்பாக காதின் உட்பகுதியில் அமைந்திருக்கும் ஃவெஸ்டிஃபுல் (Vestibule) என்ற பகுதியில் உள்ள நரம்புகள் தான், நாம் எங்கு நிற்கிறோம்? எப்படி நிற்கிறோம்? தலையை திருப்புகிறோம் உள்ளிட்ட பல செயல்களை நரம்பு வழியாக மூளைப் பகுதிக்கு சமிக்ஞையாக அனுப்புகிறது. இந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது இந்தப் பகுதியிலிருந்து மூளைக்கு செல்லும் ரத்த நாள பகுதியில் அடைப்பு அல்லது கட்டி ஏற்பட்டாலோ தலைச்சுற்றல் ஏற்படும். வேறு சிலருக்கு காதில் ஏற்படும் தொற்றின் காரணமாகவும் தலைச்சுற்றல் ஏற்படும். எதிர்பாராமல் ஏற்படும் விபத்தின் காரணமாக காதுப் பகுதி பாதிக்கப்பட்டாலும் தலைச்சுற்றல் ஏற்படும். இதனை மருத்துவ மொழியில் Benign Paroxysmal Positional vertigo என்றும் குறிப்பிடுவர்.
இதனை எப்படி உறுதிப் படுத்துவார்கள்?
மருத்துவர்கள் நோயாளியிடம் கிளினிக்கல் டயாக்னைஸ் எனப்படும் பாதிப்பு குறித்த விவரங்களை அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதன் மூலம் பாதிப்பின் தன்மையை கண்டறிவார்கள். மேலும் VEMP எனப்படும் பரிசோதனையை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். இதன்போது காதில் உள்ள நரம்புகள் எந்த வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவரும். மிக சிலருக்கே எம் ஆர் ஐ ஸ்கேன் என்ற பரிசோதனை மூலம் பாதிப்பினை கண்டறிவார்கள்.
சிகிச்சைகள் என்ன?
முதலில் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து மருந்து மற்றும் மாத்திரைகள் மூலம் முழுமையான நிவாரணம் வழங்குவார்கள். தலைச்சுற்றல் மீண்டும் மீண்டும் ஏற்படக்கூடிய பாதிப்பு என்பதால், ஒருபோதும் சுய மருத்துவம் பார்த்துக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு முறையும் மருத்துவரின் ஆலோசனையுடன் தான் மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனைப் புறக்கணித்தால், மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு, பக்கவாதம், காது கேளாமை, இதய பாதிப்பு, பார்வைத் திறன் பாதிப்பு போன்றவை ஏற்படக்கூடும். மீண்டும் மீண்டும் தலைச்சுற்றல் ஏற்பட்டால், மருந்து, மாத்திரைகளுடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பிரத்யேக பயிற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளவேண்டும். அதன் பிறகு அதிலிருந்து நம்மை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள இயலும். தசைகளை வலிமைப்படுத்துவதற்காக பயிற்சிகளை மேற்கொள்வதைப்போல் எம்முடைய உடல் சமநிலையில் இருப்பதற்கான பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு தற்போது அமெரிக்கா போன்ற மேலைத்தேய நாடுகளில் லேசர் தெரபி உள்ளிட்ட பிஸியல் தெரபி பாணியிலான சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
எம்முடைய உடல் சமநிலையில் இருப்பதற்கு காது, கண்கள், எம்முடைய பாதங்களில் உள்ள நரம்புகள் ஆகியவை ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன. மூன்று உறுப்புகளும் ஒருங்கிணைந்து முழுமையான திறனுடன் பணியாற்றுவதற்கான உடற்பயிற்சியினை பிரத்யேக இயன்முறை மருத்துவர்கள் மூலம் தெரிந்துகொண்டு, தொடர்ச்சியாக செய்து வந்தால் தலைச்சுற்றல் என்னும் பாதிப்பிலிருந்து முழுமையாக தற்காத்துக் கொள்ள இயலும். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 94437 89255 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
சந்திப்பு: அனுஷா
Tags: News, Beauty, Lifestyle