அஸ்கைட்ஸ் (Ascites) எனப்படும் வயிறு வீக்கப் பாதிப்பிற்குரிய சிகிச்சை!

அஸ்கைட்ஸ் (Ascites) எனப்படும் வயிறு வீக்கப் பாதிப்பிற்குரிய சிகிச்சை!

“இன்றைய தேதியில் எம்மில் பலருக்கும் வயிறு வீக்கமடைந்தும், சிலருக்கு வயிறு உப்பிய வடிவிலும் காணப்படும். வேறு சிலருக்கு காலையில் எழுந்தவுடன் வயிறு வீங்கியது போன்ற உணர்வு இருக்கும். குடல் மற்றும் வயிற்றுப் பகுதியில் வாயுக்கள் சேர்வதால் தான் இத்தகைய நிலை ஏற்படுகிறது. இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும்.” என்ற தகவலை பகிர்ந்து கொண்டே எம்முடன் பேசத் தொடங்குகிறார் சென்னையைச் சேர்ந்த டாக்டர். D. கண்ணன் M.S.,M.Ch., Surgical gastroenterologist. இவரிடம் வயிறு வீக்கம் குறித்தும், அஸ்கைட்ஸ் எனப்படும் வயிறு வீக்கப் பாதிப்பிற்குரிய சிகிச்சை குறித்தும் விளக்கமளிக்குமாறு கேட்டோம்.

வயிறு வீக்க பாதிப்பு குறித்து..?
 
வயிற்றில் உண்டாகும் வாயு அதிகமாகும் நிலையில், அழுத்தத்துடன் உடலிலிருந்து ஏதேனும் ஒருவகையில் வெளியேறவேண்டும். அவை வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிட்டால், வயிறு வீக்கமடையும். வயிறு வீக்கம், வயிற்று உப்புசம், அஜீரணம் உள்ளிட்ட பல அசௌகரியங்கள் ஏற்படும். சில பெண்களுக்கு மாதவிடாய் தருணங்களில் இத்தகைய வயிறு வீக்கமும், வாந்தியும் ஏற்படும். இதனைத் தொடர்ந்து மலச்சிக்கல், எரிச்சலூட்டும் குடல் நோய் அறிகுறி, சிறுகுடல் பாதிப்பு போன்றவை இருந்தாலும் வயிற்றில் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. தாகம் எடுக்கும்போது போதுமான அளவு தண்ணீர் அருந்தாதாலும், பகலில் தேவையான அளவிற்கு தண்ணீர் அருந்தாதாலும், பசியற்ற நிலையிலும் சுவைக்காக அகால வேளைகளிலும் நொறுக்குத்தீனிகள் உள்ளிட்டவற்றை சாப்பிடும் உணவு பழக்கத்தாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.

அஸ்கைட்ஸ் எனப்படும் வயிறு வீக்கப் பாதிப்பு குறித்து?
 
வயிற்றுப் பகுதியில் நீர் கோர்ப்பு ஏற்பட்டதைத்தான் அஸ்கைட்ஸ் என்கிறார்கள். பொதுவாக வயிற்றில் மண்ணீரல், கல்லீரல், கணையம், சிறுகுடல், பெருங்குடல் என பல பகுதிகள் இருக்கிறது. இவை அனைத்தையும் பாதுகாக்கும் உறையாக பெரிட்டோனியம் என்ற பாதுகாப்பு கவச உறை உள்ளது. இந்த பெரிட்டோனியம் பகுதியில் Peritoneal Fluid எனப்படும் திரவம் சுரக்கிறது. இந்த திரவத்தின் அளவு இயல்பாக ஒவ்வொரு மனிதருக்கும் 20 மி.லி. என்ற அளவிற்கு கீழாகத்தான் இருக்க வேண்டும். இந்த திரவம் வயிற்றில் உள்ள பகுதிகள் ஒன்றையொன்று மோதிக் கொள்ளாமல் இருக்க உராய்வு திரவமாக பயன்படுகிறது. இந்த திரவத்தின் அளவு இயல்பான அளவைவிடஅதிகமாக இருந்தால், அதாவது 25 மி.லி. அளவைவிட அதிகமாக இருந்தால் அஸ்கைட்ஸ் எனப்படும் வயிற்றில் நீர் கோர்ப்பு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிப்பார்கள். 

இது எதனால் ஏற்படுகிறது?
 
மது அருந்தும் பழக்கமுடையவர்களுக்கு நாளடைவில் cirrhosis liver எனப்படும் கல்லீரல் சுருக்க பாதிப்பு ஏற்படும். இதனால் கல்லீரலின் அளவு குறையத் தொடங்கும். இதன் காரணமாக கல்லீரலில் இருக்கும் ரத்த நாளங்கள் விரிவடைந்து Portal Hypertension என்ற பாதிப்பு உருவாகும். இதனால் தான் அஸ்கைட்ஸ் எனப்படும் வயிறு வீக்கப் பாதிப்பு ஏற்படுகிறது. வேறு சிலருக்கு வயிற்றுப்பகுதியில் டியூபர்குளோஸிஸ் எனப்படும் காச நோய் தொற்றுக்கான அறிகுறிகள் மற்றும் உடலில் ஏற்படும் புற்று நோயின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படும். இதய செயலிழப்பு காரணமாகவும் இத்தகைய பாதிப்பு பலருக்கு ஏற்படக்கூடும். இதயத் துடிப்பு சீராக இருக்கும் போது உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தின் இயக்கம் இயல்பாக இருக்கும். சிலருக்கு இதயத் துடிப்பில் சீரற்ற தன்மை ஏற்படுவதால், அதன் காரணமாக ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு, கால் பகுதியில் வீக்கம் ஏற்பட தொடங்கும். இதனால் கால் பகுதியில் நீர் கோர்க்க தொடங்கும். இதனைத் தொடர்ந்து வயிற்றுப் பகுதியிலும் நீர் கோர்ப்பு ஏற்படும். வேறு சிலருக்கு நுரையீரல் பகுதியிலும் நீர் கோர்ப்பு பாதிப்பு ஏற்பட்டு, மூச்சுத் திணறல் உண்டாகி, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும். மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களுக்கு கல்லீரல் மட்டுமல்லாமல் அவர்களின் கணைய உறுப்பும் பாதிக்கப்படுகிறது. நாட்பட்ட கணைய பாதிப்பின் காரணமாகவும் வயிற்றில் நீர் கோர்க்க தொடங்கும்.
 
பச்சிளம் குழந்தைகளுக்கு Nephrotic Syndrome என்ற பாதிப்பின் காரணமாக அவர்களின் உடலில் உள்ள அதிக அளவிலான புரத சத்து நீர் வழியாக வெளியேற தொடங்கும். இதன் காரணமாக ரத்த குழாய்களில் அழுத்த பாதிப்பு ஏற்பட்டு அவர்களுக்கு வயிற்றில் நீர் கோர்ப்பு பாதிப்பு ஏற்படும். வேறு சிலருக்கு ஹைப்போ தைராய்டிசம் எனப்படும் பாதிப்பு இருந்தாலும் அவர்களுக்கும் இது போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏனெனில் தைராய்டு சுரப்பி இயல்பான அளவைவிட குறைவாக சுரந்தாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படும். மேலும் Kwashiorkor என்ற ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு உண்டாகும்.
 
இதற்கான அறிகுறிகள் என்ன?
 
வயிறு எப்போதும் உப்பிய நிலையில் இருக்கும். பசி அதிகமாக இருக்காது. இத்தகைய பாதிப்பின் போது சிலருக்கு நுரையீரல் பகுதியில் அழுத்தம் ஏற்படுவதால் மூச்சுத்திணறல் பாதிப்பும் ஏற்படக்கூடும்.
 
இதற்கான சிகிச்சை என்ன?
 
முதலில் மருத்துவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பின் அளவை வெகுவாக குறைத்துக் கொள்ளும்படி பரிந்துரை செய்வார்கள். சிலருக்கு Diuretic therapy எனப்படும் சிகிச்சையை வழங்குவார்கள். இத்தகைய சிகிச்சைக்குப் பிறகும் வயிற்றில் நீர் கோர்ப்பது தொடர்ந்தால் அவர்களுக்கு  Peritoneal Tapping என்ற சிகிச்சையை மேற்கொள்வார்கள். சிலருக்கு இத்தகைய சிகிச்சையின் போதும் எதிர்பார்த்த அளவிற்கு பலன் கிடைக்கவில்லை என்றால், அவர்களுக்கு TIPS ( Transjugular Intrahepatic Portosystemic Shunt ) எனப்படும் சத்திரசிகிச்சை மேற்கொள்வார்கள். இத்தகைய சிகிச்சைக்கு பின்னரும் முழுமையாக குணமடையவில்லை என்றால் அவர்களுக்கு பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு, கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும் என்று பரிந்துரைப்பார்கள். 

வராமல் தடுக்க இயலுமா..?
 
இத்தகைய பாதிப்பை வராமல் தடுக்க வேண்டுமென்றால் ஜங்க் ஃபுட் எனப்படும் துரித உணவு வகைகளை சாப்பிடுவதை முற்றாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் இத்தகைய உணவுகளில் ஊட்டசத்தும், நார்சத்தும் ஏதுமில்லை. மேலும் இவை உங்களுடைய வயிற்றுப்பகுதியில் சென்றபிறகு செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். பதப்படுத்தப்பட்ட பக்கற்றுகளில் அடைக்கப்படும் உணவுகளில் சோடியம் அதிகமாக இருப்பதால், இது உங்கள் உடலில் நீரை தக்க வைத்துக்கொள்ள காரணமாகிறது. வேறு சிலர் குளிர் பானங்களை அருந்தும்போது, ஸ்ட்ரா வைத்து உறிஞ்சுவதால் காற்றை வயிற்றில் நிரப்புகிறார்கள் இத்தகைய பானங்களில் காற்றோட்டம் அதிகமாய் இருப்பதால் அவை உங்களுக்கு வயிறு வீக்கத்திற்கு காரணமாகிறது. 
 
நீங்கள் சாப்பிடும் உணவை நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலமே வயிறு வீக்கத்தை குறைக்கலாம். வயிற்றுப் பகுதியில் அதிகமான அமிலங்கள் சுரக்கும். அவை வாயுவை உருவாக்கும். ஒரே இடத்தில் நாள் முழுவதும் அமர்ந்து பணியாற்றாமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து, ஐந்து நிமிடம் நடைபயிற்சி செய்து, சிறிதளவு தண்ணீரை அருந்திவிட்டு மீண்டும் பணியைத் தொடங்கினால், இவை குறைவதற்கான வாய்ப்பு உண்டாகும். நார் சத்து மிக்க உணவுகளை நாளாந்த உணவு பட்டியலில் இடம் பெறுவதும் அவசியம். ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரையில் புரோபயாடிக் உணவுகளையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 44 2442 5383 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top