Eosinophilic Esophagitis எனப்படும் ஈசினோபிலிக் உணவு குழாய் அழற்சி பாதிப்புக்குரிய நவீன சிகிச்சை
Posted on 18/05/2022
எம்முடைய உணவு குழாய் பகுதியில் சிலருக்கு ஈசினோபிலிக் ஈஸோபாகஸிட்டிஸ் எனப்படும் உணவு குழாய் வீக்கம் மற்றும் அழற்சி பாதிப்பு ஏற்படும். தற்போது இத்தகைய பாதிப்புக்கு புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்ஸ் மற்றும் உணவு சிகிச்சை ஆகிய சிகிச்சை முறைகள் மூலம் குணப்படுத்தலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய வாய் பகுதிக்கும், வயிறு பகுதிக்கும் இடையே உணவுக்குழாய் உள்ளது. இந்த உணவு குழாயில் எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய காரணியான வெள்ளை அணுக்கள் எதிர்பாராத வகையில் உற்பத்தியாகிவிடும். இது உணவுக் குழாயின் மீது பாரிய பாதிப்பை ஏற்படுத்தி, உணவு விழுங்குதலில் சிரமம், உணவு குழாய் சுருக்கம், உணவு குழாய் வீக்கம் மற்றும் அழற்சி ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும். உணவுக்குழாயின் இயக்கத்திற்கு ஆதாரமான வலிமையான திசுக்களை இது சேதப்படுத்தும்.
இந்த பாதிப்பு மருத்துவத் துறையினரால் 90களில் தான் கண்டறியப்பட்டது. தற்போது உலக அளவில் பத்தாயிரம் நபர்களுக்கு ஒருவருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.
உணவு விழுங்குவதில் சிரமம், நெஞ்செரிச்சல், உணவு எதுக்களித்தல் போன்ற அறிகுறிகள் மூலம் இத்தகைய பாதிப்பை உணரலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அருந்துவதில் கடினமான நிலை ஏற்படும். 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு உணவை எடுத்துக் கொள்வதில் சிரமம், வாந்தி, அடிவயிறு வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவர்கள் எண்டாஸ்கோப்பி என்ற பரிசோதனை மூலம் உணவுக்குழாயில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை துல்லியமாக அவதானிப்பார்கள். வேறு சிலருக்கு இத்தகைய பாதிப்பை உறுதி செய்ய பயாப்ஸி எனப்படும் திசு பரிசோதனை, ரத்த பரிசோதனை, உணவுக்குழாயின் இயங்கு திறன் பரிசோதனை போன்றவற்றை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள்.
புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்ஸ் என்ற பரிசோதனை மற்றும் மருந்தின் மூலம் உணவுக்குழாயின் அமில தன்மையை மற்றும் அமில தன்மையின் காரணமாக உண்டாகி இருக்கும் தடைகளை கண்டறிந்து சீராக்குவர். இதனைத் தொடர்ந்து நோயாளிக்கு ஒவ்வாமையை உண்டாக்கும் உணவு வகை மற்றும் உணவுப் பொருள்கள் தொடர்பான பரிசோதனையை மேற்கொண்டு, எத்தகைய உணவை சாப்பிடலாம், எதனை முற்றாக தவிர்க்க வேண்டும்.. என்ற பட்டியலை தயாரித்து அதனை உணவு சிகிச்சை என்ற பெயரில் வழங்குவார்கள். இந்த உணவு சிகிச்சையை தொடர்ந்து உறுதியாக கடைப்பிடித்தால், இத்தகைய பாதிப்பில் இருந்து முழுமையான நிவாரணம் பெறலாம்.
டாக்டர்.கோபால்சுவாமி
தொகுப்பு: அனுஷா
Tags: News