கருப்பை வாய் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முழுமையான நிவாரண சிகிச்சை
Posted on 21/03/2022
இன்றைய திகதியில் உலக அளவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இவர்களில் 50 சதவீதத்திற்கு மேலானவர்கள் உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ளாமல் உயிரிழக்கும் அபாயத்தை எதிர் கொள்கிறார்கள். இந்நிலையில் சரியான தருணத்தில் இதற்கான பரிசோதனையை முறையாக மேற்கொண்டால், கருப்பை வாய் புற்றுநோயை முழுமையாக கட்டுப்படுத்தி, ஆயுள் முழுவதும் வலி இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ இயலும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக கூடுதல் விவரங்களை கேட்பதற்காக டாக்டர். பிரேம் குமார் தேவதாஸ், M.D.,D.M., புற்றுநோய் சிகிச்சை நிபுணர் அவர்களை சந்தித்தோம்.
கருப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன?
யூட்ரஸ் எனப்படும் கருப்பைக்கும், வஜைனா எனப்படும் பிறப்புறுப்பிற்கும் இடையே அமைந்திருக்கும் செர்விக்ஸ் என்ற கருப்பை வாயின் நுழைவு பகுதியில் ஏற்படும் புற்றுநோயை தான் கருப்பை வாய் புற்று நோய் என குறிப்பிடுகிறார்கள். இந்த வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமி தான் முக்கிய காரணம். இந்த வகையான வைரஸ் மனிதர்களை மட்டுமே தாக்குகிறது. அதிலும் மனிதர்களால் மூலமாகவே பரவி, தாக்குகிறது. இந்த வகை வைரஸ்களில் 170 வகை உண்டு, இவை அனைத்துமே கருப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்துவதில்லை.
புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் என்ன?
முதலில் தோல் பகுதியில் மருக்கள் தோன்றும். சிலருக்கு பிறப்புறுப்பு பகுதிகளிலும், மறைவான அந்தரங்க பகுதிகளிலும் மருக்கள் தோன்றும். இதனால் பாரிய அளவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. இத்தகைய மரு தோன்றியவர்களை மற்றவர்கள் தொடுவதன் காரணமாகவோ அல்லது நெருக்கமாக பழகுவதன் காரணமாகவோ தான் இத்தகைய வைரஸ் கிருமி மற்றவருக்கு பரவும். ஆனால் இவை ஆபத்தை ஏற்படுத்துவதில்லை. அதாவது இது பாரிய விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. அதே தருணத்தில் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்களில் 14 வகையினதான வைரஸ் உடலுறவின் காரணமாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும். இவைதான் ஆபத்தை விளைவிக்கும் புற்றுநோயாக உருவாகிறது. சிலருக்கு இந்த வகையான வைரஸ்கள் பால்வினை நோய்களையும் உருவாக்கி, அதனூடாக கருப்பை வாய் புற்றுநோயை உண்டாக்கும்.
பெரும்பான்மையான மக்களுக்கு இந்த வகையான வைரஸ்கள் அவர்களுடைய உடலில் ஒருமுறையேனும் ஊடுருவ கூடும். இதன் காரணமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் எம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் இதனை செயலிழக்க செய்துவிடும். இதன் காரணமாக 90 சதவீத மக்களுக்கு இத்தகைய வைரஸால் பாதிப்பு ஏற்பட்டாலும், அதன் பாதிப்பு தெரிவதில்லை. 10 சதவீத மக்களுக்கு இத்தகைய வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்களுடைய உடலில் நோய் எதிர்ப்புத் திறன் மிக குறைவாக இருந்தால், இத்தகைய வைரசை அழித்து, செயலிழக்க செய்ய இயலாது. இதன் காரணமாக அந்த வைரஸ் அவர்களுடைய உடலில் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் வரை தங்கிவிடக் கூடும். அதன்பிறகுதான் அவை புற்றுநோயை உருவாக்குகிறது.
புற்று நோய் எப்படி உருவாகிறது?
எம்முடைய உடலில் உள்ள செல்களுக்கு குறிப்பிட்ட ஆயுள் உண்டு. அதன் பிறகு அவை அழிந்து புதிதாக செல்கள் உருவாகும். இதேபோன்றதொரு செயல்பாடு கருப்பை வாய்ப்பகுதியிலும் நிகழும். இந்நிலையில் கருப்பை வாய்ப்பகுதியில் இரண்டு வகையான செல்கள் இருக்கும். இந்த செல்களுக்குள், அங்கு தங்கியிருக்கும் வைரஸ், தன்னுடைய மரபணுவை ஊடுருவச் செய்கிறது. இதன் பிறகு அந்த செல்களில் மரபணு மாற்றம் நடைபெறும். இதனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் இயல்பாக அழிந்து விடக்கூடிய செல்கள் அழியாமல், அங்கேயே தங்கி, கட்டுக்கடங்காமல் பல்கிப் பெருகும். இதுதான் புற்றுநோய் ஏற்படுவதற்கான தொடக்க நிலை என குறிப்பிடலாம்.
இந்த வகையான ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் பெண்ளை மட்டுமல்லாமல் ஆண்களையும் தாக்கும். ஆணுறுப்பு பகுதியிலும் புற்றுநோயை உண்டாக்கும். இதனை பெனீல் கேன்சர், ஏனஸ் கேன்சர், Oropharyngeal Cancer எனப்படும் தொண்டை புற்றுநோய் ஆகிய புற்றுநோயை உண்டாக்க கூடும்.
யாருக்கெல்லாம் இத்தகைய புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும்.?
மிக இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கும், நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்களுக்கும், புகை பிடிப்பவர்களுக்கும், மூன்றுக்கும் மேற்பட்ட அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும் பெண்களுக்கும், இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம். பால்வினை தொற்று, பலருடன் உடலுறவு போன்ற காரணங்களாலும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும். நாற்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் உண்டு.
கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதற்கான பிரத்யேக அறிகுறிகள் என்ன?
இத்தகைய புற்றுநோய்க்கு தொடக்க நிலை அறிகுறிகள் என்பது மிக அரிது. அதனால் மருத்துவத் துறையினர் இதனை ஸ்லோ கேன்சரஸ் என்று குறிப்பிடுகிறார்கள். சிலருக்கு இத்தகைய வைரஸ் உடலில் இருந்தாலும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதன் அறிகுறிகளை வெளிப்படுத்தும். இதனால் எம்மால் இத்தகைய புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா..? இல்லையா? என்பதனை உறுதி செய்ய இயலாது. இருப்பினும் பசியின்மை, உடல் சோர்வு, திடீரென்று எடை இழப்பு, பெல்விக்ஸ் எனப்படும் இடுப்புப் பகுதியில் வலி ஏற்படுவது, கால்களில் வலி ஏற்படுவது அல்லது வீக்கத்துடன் வலி ஏற்படுவது, வெள்ளை படுவது இயல்பான அளவைவிட கூடுதலாக இருப்பது, உடலுறவுக்குப் பின் வலி ஏற்படுவது, மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகும் ரத்தப்போக்கு ஏற்படுவது... போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை சந்தித்து கருப்பை வாய் புற்றுநோய் இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறியும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
எம்மாதிரியான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்?
ஸ்கிரீனிங் டெஸ்ட் எனப்படும் பரிசோதனை மூலம் இதனை க் கண்டறிவார்கள். அதிலும் குறிப்பாக பாப்ஸ்மியர் பரிசோதனை மற்றும் எச் பி வி பரிசோதனை என இரண்டு பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்துவார்கள். இதன்போது கருப்பை வாயில் இருக்கும் செல்களை பிரத்யேக கருவி மூலம் எடுத்து, அதனை ஆய்வகத்தில் பரிசோதித்து, வைரஸ் பாதிப்பை கண்டறிவார்கள். குறிப்பாக இருபத்தியோரு வயது முதல் 65 வயது வரை உள்ள பெண்கள் இந்த பரிசோதனையை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்வது நல்லது. நீங்கள் தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பாஸ்மியர் பரிசோதனை மேற்கொண்டு, உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றால், நீங்கள் கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாது என உறுதியாக தெரிந்துகொள்ளலாம். சிலருக்கு மூன்று முறை பரிசோதனையில், இரண்டு முறை எதிர்மறையான முடிவுகள் வந்தால், அவர்கள் மருத்துவரின் அறிவுரையின் பேரில் படி Colposcopy என்ற கருவியின் மூலம் கருப்பை வாயில் பரிசோதனை மேற்கொண்டு, அங்குள்ள செல்களில் ஏற்படும் மாற்றத்தை துல்லியமாக அவதானிப்பார்கள். சிலருக்கு பயாப்ஸி எனப்படும் திசு பரிசோதனை மேற்கொண்டு பாதிப்பின் வீரியத்தைப் கண்டறிவார்கள். இதன் முடிவில் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அவை எந்த நிலையில் இருக்கிறது என்பதனை கண்டறிய எக்ஸ்ரே, பி டி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்வார்கள்.
இதற்குரிய பிரத்யேக சிகிச்சை ஏதேனும் இருக்கிறதா..?
பரிசோதனையின் போது கருப்பை வாய் புற்றுநோய் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அவதானித்து, அதற்கேற்ற வகையில் பிரத்தியேக சிகிச்சையை வழங்குவார்கள். தொடக்க நிலை மற்றும் இரண்டாம் கட்ட நிலையில் கண்டறியப்பட்டால் இதனை சத்திர சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்த இயலும். இதன்போது Cone Biopsy & Radical Trachelectomy என்ற இரண்டு பிரத்தியேக சத்திரசிகிச்சையை மேற்கொண்டு, அவர்களின் கருப்பையை பாதுகாத்து குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார்கள். சிலருக்கு மட்டுமே Hysterectomy எனப்படும் சத்திர சிகிச்சையை செய்து கருப்பையை முழுவதுமாக அகற்றி விடுகிறார்கள். கருப்பைவாய் புற்றுநோய் இரண்டாவது நிலையை கடந்து விட்டால், அவர்களுக்கு சத்திரசிகிச்சை யுடன் கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி, இம்யூனோ தெரபி போன்ற சிகிச்சைகள் வழங்கப்பட்டு, பாதிப்பைக் கட்டுப்படுவார்கள். தற்போது இத்தகைய புற்றுநோய் ஏற்படாதிருக்க தடுப்பு ஊசியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 9952082727 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
சந்திப்பு: அனுஷா
Tags: News