உட்புற நரம்பு உறைவு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

உட்புற நரம்பு உறைவு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

“கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்ட பலருக்கும் பல்வேறு வகையான பக்க விளைவுகள் அல்லது இணை பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது என தெரிவிக்கிறார்கள். கொரோனாத் தொற்றிற்குப் பின்னர் யாருக்கேனும் காலில் வலி ஏற்பட்டால், அவர்கள் ஒருமுறை மருத்துவரை சந்தித்து தீப் வெய்ன் த்ரோம்போசிஸ் (Deep Vein Thrmbosis) எனப்படும் உட்புற நரம்பு உறைவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதை பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இத்தகைய பாதிப்பை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், நாளடைவில் மாரடைப்பு போன்ற பாதிப்பை உண்டாக்கி, உயிரிழப்பை ஏற்படுத்த கூடும். இதனால் கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு பிறகு மூன்று முதல் ஆறு மாதம் காலம் வரை உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.”என்ற தகவலை பகிர்ந்து கொண்டே எம்முடன் பேச தொடங்குகிறார் டாக்டர் கார்த்திகேயன், M.D., மருத்துவ நிபுணர்இ இவரிடம் சுப்பர்பிஸியல் த்ரோம்போசிஸ் மற்றும் தீப் வெய்ன் த்ரோம்போசிஸ் ஆகிய பாதிப்புகள் குறித்து மருத்துவ ரீதியாக விளக்கம் அளிக்குமாறு கேட்டோம்.

கொரோனாத் தொற்றுப் பாதிப்புக்கு பின்னர் காலில் உண்டாகும் வலி குறித்து..?
 
இதயத்திலிருந்து ரத்தக்குழாய்களில் ரத்தம் பயணித்து, கால் பகுதிக்கு செல்கிறது. பிறகு அங்கிருந்து வேறொரு ரத்தக்குழாயின் மூலம் அசுத்தங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் இதயப் பகுதிக்கு வருகை தந்து, நுரையீரலுக்குள் செல்கிறது. ரத்த குழாய்களின் புற பகுதிகள் சேதமடைந்தாலோ அல்லது பலவீனமடைந்தாலோ அப்பகுதியில் அசுத்த ரத்தம் தங்கி, கருமை நிறத்தை உண்டாக்கும். குறிப்பாக கெண்டைக்கால் மற்றும் கால் பகுதி இத்தகைய பாதிப்பை காணலாம். இதனை சுப்பர்பிஸியல் த்ரோம்பாஸிஸ் எனப்படும் வெளிப்புற நரம்பு உறைவு பாதிப்பு என்று வகைப்படுத்துவர்.
 
காலின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் எலும்புப் பகுதியில் நீண்ட சிரை எனும் ரத்தநாள பகுதியில் உட்புறத்தில் ஏற்படும் அடைப்பு நரம்பு ரத்த உறைவு பாதிப்பு என்கிறார்கள். சிலருக்கு இத்தகைய பாதிப்பு கை பகுதியில் ஏற்பட்டால், அவர்களுக்கு கழுத்து வலி, தோள்பட்டை வலி, கைகளில் வலி போன்றவை ஏற்படும். சிலருக்கு கைகளில் வீக்கம் ஏற்படும். அதைத் தொட்டால் வலி உண்டாகும். அந்த பகுதி சிவந்து காணப்படும்.
 
கொரோனாத் தொற்றுப் பாதிப்புக்கு பின்னரோ அல்லது முன்னரோ, பொதுவாக கால்களில் வலி ஏற்பட்டாலோ, கால்களில் ஒரு குறிப்பிட்ட பகுதி சிவப்பு நிறமாக மாறினாலோ அல்லது கால்களில் சற்று சூடான உணர்வை உணர்ந்தாலோ.. அது நரம்பு உறைவு பாதிப்பாக இருக்ககூடும். நரம்புகளில் ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ ஏற்படும் ரத்த உறைவு, இத்தகைய பாதிப்பை உண்டாக்குகிறது. இது யாரை வேண்டுமானாலும் பாதிக்கக்கூடும். பொதுவாக 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இத்தகைய பாதிப்பு அதிகம் ஏற்படுகின்றது.

இந்த பாதிப்பிற்கு ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
 
கால்களில் ஏற்படும் வலி, கால்கள் சிவப்பு நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகளை உடனடியாக கண்டறிந்து, மருத்துவரின் ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். இதனை தவிர்த்தால் ரத்த உறைவு அல்லது ரத்த கட்டிகள், ரத்த ஓட்டத்தின் ஊடாக பயணித்து நுரையீரலுக்குள் சென்று விடும். அங்கு ரத்த ஓட்டத்தில் அடைப்பை ஏற்படுத்தி, பல்மனரி எம்போலிஸ்ம் என்ற பாதிப்பை உருவாக்கும். இதனால் திடீரென்று சுவாசிப்பதில் சிரமம் ஏற்படக் கூடும். நெஞ்சக பகுதியில் வலி ஏற்படும். சீரற்ற இதயத் துடிப்பு நிகழும். தலைசுற்றல் இருக்கும். இருமும்போது மார்பு வலி அதிகரிக்கும். சிலருக்கு இருமும்போது ரத்தம் வெளிப்படக்கூடும்.
 
இதற்கான காரணங்கள் என்ன?
 
நரம்பு பகுதிகளில் ஏற்படும் காயம், சத்திர சிகிச்சையின் போது ஏற்படும் காயம், புற்றுநோய், இதய நோய் போன்ற கடுமையான தொற்றுநோய் போன்ற பாதிப்புகளின் காரணமாகவும், இத்தகைய ரத்த உறைவு பிரச்சனை ஏற்படும். சிலருக்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்தின் பக்கவிளைவினாலும் கூட இத்தகைய பாதிப்பு ஏற்படும். நாட்பட்ட நிலையில் படுக்கையிலேயே இருந்தால், அவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
 
மரபணு காரணிகள், பேறு காலத்தின் போது சில பெண்களுக்கு இத்தகைய பாதிப்பு உண்டாகும். கர்ப்ப காலத்தின் போது ரத்த அளவு அதிகரிக்கும். ஆனால் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். சத்திரசிகிச்சை செய்து குழந்தை பிரசவித்த பெண்கள், வாரக்கணக்கில் படுக்கையில் படுத்து ஓய்விலிருப்பதால் அவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம். பக்கவாத பாதிப்பு ஏற்பட்டு நாட்கணக்கில் படுக்கையிலேயே இருப்பவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.   எட்டு மணித்தியாலத்துக்கும் மேற்பட்ட தொடர் ஆகாய விமான பயணம் செய்பவர்களுக்கும், இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு உண்டு. சிலருக்கு கதீட்டர் மூலமாக சிகிச்சை அளித்தால், அதன் காரணமாகவும் நரம்பு உறைவு பாதிப்பு ஏற்படக்கூடும். சில பெண்கள் குழந்தை பிறப்பை தள்ளி வைப்பதற்காக பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் ஹோர்மோன் சிகிச்சைகளின் மூலமாகவும் இது ஏற்படக்கூடும். உடல் பருமன், இதய செயலிழப்பு, குடல் அழற்சி நோய் ஆகியவற்றின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு உண்டாகலாம். வேறு சிலருக்கு புகைப்பிடித்தல் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.
 
எத்தகைய பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்?
 
அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை, நுரையீரல் ஓஞ்சியோகிராபி என்ற பரிசோதனை, டி டைமர் பரிசோதனை, வெனோக்ராபி என்ற பரிசோதனை ஆகியவற்றின் மூலம் நரம்பு இரத்த உறைவு எங்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதனை துல்லியமாக அவதானிக்கலாம். வேறு சிலருக்கு ரத்த பரிசோதனைகள், எலக்ட்ரோ கார்டியோகிராபி போன்ற பரிசோதனைகள் மூலமும் இதனை கண்டறிவார்கள்.
 
சிகிச்சை முறைகள் என்ன?
 
ரத்த உறைவின் தன்மையை பொறுத்து, அதன் அடர்த்தியை குறைப்பதற்கான மருந்துகளை வழங்கி நிவாரணமளிப்பார்கள். வேறு சிலருக்கு சத்திர சிகிச்சைகள் மூலமாக பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் ரத்த உறைவு நரம்புகளை சீராக்குவார்கள். இதன் சிகிச்சையின்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பிரத்தியேக காலுறையை அணிந்திருக்க வேண்டும். 

வராமல் தற்காத்து கொள்ள இயலுமா?
 
இயலும். உடல் எடையை பராமரிப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, புகைப்பிடித்தலை முற்றாக தவிர்ப்பது, ரத்த அழுத்த பாதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பயணங்களின்போது தொடர்ந்து ஒரே நிலையில் அமர்ந்து பயணிக்காமல் கால்களை அசைப்பதோ அல்லது அதற்குரிய பயிற்சிகளையோ மேற்கொள்ள வேண்டும். படுக்கையில் ஓய்வு எடுப்பதாக இருந்தால், விரைவில் எழுந்து நடமாடுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்கும்பொழுது கால்கள் உணர்விழந்து செல்வதை தடுக்க, தசைகளுக்கான பிரத்யேக உடற்பயிற்சியை அளிக்க வேண்டும். சுறுசுறுப்பான வாழ்க்கை நடைமுறையை தெரிவு செய்து அதற்கேற்ப எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் இது தொடர்பாக ஏதேனுங்கள் சந்தேகங்கள் இருந்தால் drkk31@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். 
 
சந்திப்பு அனுஷா.

Tags: News, Beauty

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top