கொரோனாவிற்கு பின்னரான மூச்சிரைப்பு பாதிப்புக்குரிய சிகிச்சை

கொரோனாவிற்கு பின்னரான மூச்சிரைப்பு பாதிப்புக்குரிய சிகிச்சை

கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பின், நாளாந்த வாழ்க்கையில் திரும்பிய பலர், சிறிது தூரம் நடந்தவுடன் மூச்சு வாங்குகிறார்கள். அதாவது மூச்சிரைப்பு பாதிப்புக்குள்ளாகிறார்கள். வேறு சிலர் மூச்சு திணறல் பாதிப்பிற்கு ஆளாகுவதாகவும் தெரிவிக்கிறார்கள். இவையெல்லாம் கொரோனாத் தொற்று பாதிப்புக்கு பின்னரான சுவாச கோளாறுகள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். கொரோனாத் தொற்றுக்கு பின்னரான சுவாச கோளாறுகள் குறித்து மருத்துவ ரீதியான விளக்கம் பெறுவதற்காக சென்னையைச் சேர்ந்த டாக்டர் தீபா செல்வி, D.A., M.D.,(Che), Consultant interventional pulmonologist சந்தித்தோம்.

கொரோனாத் தொற்று பாதிப்புக்கு பிறகு மூச்சிரைப்பு, மூச்சிளைப்பு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறுகள் ஏற்படுகிறதே ஏன்.?
 
கொரோனாத்  தொற்றுக்கு பிறகு சிலருக்கு பேசும்போதும் மூச்சிரைப்பு ஏற்படுகிறது என்றும், நீராடிய பிறகு மூச்சிரைப்பு ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கிறார்கள். முதலில் எம்முடைய நுரையீரலின் பிரதான பணியே வளிமண்டலத்தில் இருக்கும் காற்றை உள்ளிழுத்து, அதில் ஓக்சிஜனை உடலுக்குள் பயணிக்கவைத்து, அதன் பிறகு உடலிலிருந்து கார்பன் டை ஓக்சைடை வெளியேற்றுவது தான் இதனுடைய பிரதான பணி. 
 
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று எம்முடைய நுரையீரலை நேரடியாகத் தாக்கி, ஐந்து சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரை சேதப்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான் கொரோனாவிற்கு பிறகு சுவாசம் தொடர்பான நாட்பட்ட பிரச்சனை உண்டாகிறது. இதனால் சேதமடையாத எஞ்சிய நுரையீரல் பகுதி தான் உடலுக்கு தேவையான காற்றை உள்ளிழுத்து வெளியே அனுப்பும் பணியை செய்ய வேண்டியதிருக்கிறது. இது முதலில் நுரையீரலுக்கு கூடுதல் சுமையைத் தருகிறது. அதே தருணத்தில் கொரோனா தொற்றின் காரணமாக எம்முடைய உடலுக்கு இயல்பான அளவை விட கூடுதலாக ஓக்ஸிஜன் தேவைப்படுகிறது. இந்நிலையில் பலவீனமான குறைந்த அளவே இயங்கக்கூடிய நுரையீரல், அதிக அளவில் தேவைப்படும் ஓக்சிஜனை உள்ளிழுத்து வெளியே விடுவதற்கான பணியை செய்யும் பொழுது விரைவில் இயல்பான நிலையிலிருந்து சமச்சீரற்ற தன்மைக்கு மாற்றம் தெரிகிறது. இதன் காரணமாகவே பலருக்கு நுரையீரல் பலவீனமடைகிறது.
 
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீத பேருக்கு மிதமான நுரையீரல் தொற்று அல்லது நுரையீரலை அதிகளவில் பாதிக்காத தொற்று ஏற்படுகிறது. மீதமுள்ள 15 சதவீதத்தினருக்கு கொரோனா வைரஸ் நுரையீரலில் பாரிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் நோயிலிருந்து மீண்ட பிறகும் நாட்பட்ட தொடர் இருமல், மூச்சுத்திணறல் மற்றும் மூச்சிரைப்பு ஆகிய பாதிப்பை உண்டாக்குகிறது. இதன்போது கணுக்கால் பகுதியில் சிறிய அளவில் ரத்தக் கட்டிகள் உருவாகி, அது நுரையீரலில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தி, நுரையீரலின் செயல்பாட்டிற்கு தடை ஏற்படுத்துகிறது. அதாவது ஓக்சிஜன் பரிமாற்றத்தை தடுத்து, கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் உடலிலுள்ள இணைப்புத் திசுக்களில் பாதிப்பை உண்டாக்குகிறது. கொரோனா வைரஸ் தாக்கிய பின் நுரையீரல் பகுதியில் தழும்புகளையும் ஏற்படுத்துகிறது. இந்த தழும்புகளை குணப்படுத்தாவிட்டால் மூச்சுத்திணறலும், மூச்சிரைப்பும் ஏற்படும் சூழல் உருவாகிறது.
 
தொற்று பாதிப்புக்கு பிறகு அதிலிருந்து குணமடைந்தவர்கள் ஒரு மாத காலத்திலிருந்து மூன்று மாத காலம் வரை மூச்சிரைப்பு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள். இவர்கள் இயல்பாக மூச்சு விடும் முறையிலிருந்து மாறுபட்டு, தேவைக்கு அதிகமாக மூச்சு விடுவதைக் காணலாம். சிலர் வாய் அல்லது மேல் மார்பு பகுதியிலிருந்து மூச்சு விடுவார்கள். வேறு சிலர் தவறான மூச்சு தசைகளை பயன்படுத்துவதன் காரணமாகவும் இத்தகைய சுவாசக் கோளாறுகள் ஏற்படக்கூடும். பரிபூரண ஓய்வு, சத்தான உணவு, ஆரோக்கியமான மனநிலை ஆகியவற்றுடன் மூச்சுப் பயிற்சியை தொடர்ச்சியாக மேற்கொள்ளும்போது தான் இதிலிருந்து விடுபட இயலும்.
 
எம்மாதிரியான மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்..?
 
Belly Breathing, அல்லது Diaphragmatic Breathing என்ற பயிற்சி மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளவேண்டும். இதன்போது எம்முடைய நுரையீரல் பகுதிக்கும், மேல்வயிற்று பகுதிக்கும் இடைப்பட்ட இணைப்பு திசு பகுதியில் வலிமையும், முன்னேற்றமும் ஏற்படும். இந்தப் பகுதியின் சுருங்கி விரியும் தன்மை இயல்பாக இருந்தால்தான், நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மை இயல்பாக இருக்கும். கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உடலிலுள்ள அனைத்து பகுதிகளிலும் வலிமை குறைந்து இருந்தாலும், இப்பகுதி கூடுதலாக பலவீனமடைந்திருக்கும். இந்த பயிற்சியை மருத்துவரின் ஆலோசனையுடன், படுக்கை நிலையில் மேற்கொள்ளும் பொழுது கூடுதல் பலனை பெறலாம். Pursed Lip Breathing என்ற மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது தான், எம்முடைய நுரையீரலில் ஓக்சிஜன் பரிமாற்றம் நடைபெறும். அதனால் இந்த பயிற்சியை மேற்கொள்ளும் போதும் நுரையீரலின் செயல்பாடு மேம்படுத்தப்படுகிறது. Thoracic Expansion Breathing என்ற மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது, உங்களது இதயத்தின் விலாப் பகுதி மற்றும் நெஞ்சக பகுதி விரிவடைகிறது.
 
இந்த மூன்று வகையான மூச்சு பயிற்சியை உங்களது மருத்துவரின் வழிகாட்டல் மட்டும் ஆலோசனையின் பெயரில் குறைவான எண்ணிக்கையில் தொடங்கி, பிறகு சீராக அதிகரித்து இந்த பயிற்சியை மேற்கொண்டால் மூச்சிரைப்பு தொடர்பான சிக்கல்கள் சீரடையும். இத்தகைய மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளும் பொழுது எம்முடைய நுரையீரலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன. அதே தருணத்தில் நுரையீரலின் செயல்திறன் மேம்படுத்தப்படுகிறது. அத்துடன் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு திறனும் உயர்கிறது. எனவே மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து செய்து, கொரோனாத் தொற்று பாதிப்பு பின்னரான சுவாச கோளாறுகள் நீங்கி, சுவாசம் இயல்பாகும். இந்த மூச்சுப் பயிற்சியை கொரோனாத் தொற்று பாதித்தவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் மேற்கொள்ளலாம். இதன் காரணமாக அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் சக்தி அதிகரிக்கிறது. நீங்கள் மூச்சுப் பயிற்சியை தொடங்கும் பொழுது, நீங்கள் அமர்ந்திருக்கும் இடம் காற்றோட்ட வசதி உள்ளதாகவும், நீங்கள் அணிந்திருக்கும் ஆடை உங்களின் சௌகரியத்துக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். காலையில் உணவருந்தாத நிலையில் இதனை மேற்கொண்டால் உங்களது உடலில் இயல்பான சுவாச செயல்பாடு அதிகரிக்கும்.
 
அதே தருணத்தில் கொரோனாத் தொற்று பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இத்தகைய மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளும் முன் உங்களுடைய மருத்துவர் மற்றும் இயன்முறை மருத்துவரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலை அவசியம் பெற வேண்டும். மேலும் சிலருக்கு இத்தகைய மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளும் பொழுது ஏதேனும் மூச்சுதிணறல் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதுதொடர்பாக மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 9489113617 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top