இதய துடிப்பு பரிசோதனை அவசியமா?
Posted on 13/06/2022
இன்றைய தேதியில் எம்மில் சிலருக்கு இதயத்துடிப்பு பல தருணங்களில் சீராக இருக்கும். சில தருணங்களில் சமசீரற்றதாக இருக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் உறங்கும் போது இதயத் துடிப்பு சீராக இருக்கவேண்டும். சீராக இல்லையெனில் அவர்களுக்கு இதயம் சார்ந்த பாதிப்பு இருப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம். இதனால் தான் மருத்துவர்கள் இதயத்துடிப்பு குறித்த பரிசோதனையை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.
சர்வதேச அளவில் ஆண்டுதோறும் பதினோரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகளால் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் ஆய்வுகளின்படி தெரிவிக்கிறது. மேலும் அந்த ஆய்வுகளில் தெற்காசிய நாடுகளில் இதயம் சார்ந்த பிரச்சனைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாரடைப்பு ஏற்படுவதற்கு முன், இதயத்துடிப்பு, ரத்த நாள அடைப்பு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யும் பொழுது அதிக அளவில் மூச்சிரைப்பு ஏற்படுவது, மாடிப்படி ஏறும் போதோ அல்லது இறங்கும்போதோ மூச்சு வாங்குவது,. சிலருக்கு சிறிது தொலைவு நடக்கும்போது மூச்சு வாங்கும். சிலருக்கு தாடை பகுதியில் அல்லது பல்லில் வலி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படும். தோள்பட்டை அல்லது இடது கையில் பரவும் வலி போன்றவை இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கான அறிகுறியாக எடுத்துக்கொண்டு, உடனடியாக அருகில் உள்ள இதய மருத்துவ நிபுணரிடம் காண்பித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ரத்தச் சர்க்கரையின் அளவு, உயர் குருதி அழுத்தம், உடற்பருமன், புகை பிடிக்கும் பழக்கம், மன அழுத்தம், உறங்கும் போது குறட்டை பிரச்சனை போன்றவை ஏற்பட்டால் ...அவர்கள் உடனடியாக இதய துடிப்பு குறித்த பரிசோதனையை மருத்துவர் பரிந்துரைக்கும் கால அளவுகளில் தவறாமல் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 70 முதல் 100 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். 100க்கு மேல் சென்றால், இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், 50 என்ற எண்ணிக்கைக்கு குறைவாக இருந்தால், இதயம் சார்ந்த வேறு பாதிப்புகள் இருக்கலாம் என்பதையும் உணர்ந்துகொண்டு, மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். இதயத்துடிப்பு குறித்த பரிசோதனையுடன் இசிஜி, எக்கோ, டிரெட்மில் பரிசோதனை ஆகிய பரிசோதனைகளையும் தவறாது மேற்கொண்டு, பிரச்சனையை தொடக்க நிலையில் கண்டறிந்து முழுமையான சிகிச்சை எடுத்துக் கொண்டால், உயிரிழப்பு ஏற்படுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
டாக்டர்.துர்காதேவி
தொகுப்பு: அனுஷா
Tags: News