'கடமையை செய்'யும் எஸ் ஜே சூர்யா
Posted on 01/02/2021
இயக்குனரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா நடிப்பில் தயாராக இருக்கும் புதிய படத்திற்கு 'கடமையை செய்' என பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
சுந்தர் சி நடிப்பில் வெளியான 'முத்துன கத்திரிகா' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் வேங்கட்ராகவன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'கடமையை செய்'. இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிக் பொஸ் பிரபலமும், கவர்ச்சி நாயகியுமான யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, அருண்ராஜ் இசையமைக்கிறார். ரி. ஆர். ரமேஷ் மற்றும் ஜாஹிர் உசேன் ஆகிய இருவர்கள் இப்படத்தை தயாரிக்கிறார்கள். 'கடமையை செய்' படத்தின் படப்பிடிப்பை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்.
நடிகர் எஸ் ஜே சூர்யா தற்போது 'உயர்ந்த மனிதன்', 'மாநாடு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தயாரான 'நெஞ்சம் மறப்பதில்லை', மற்றும் 'பொம்மை' ஆகிய படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.