சிறார்களை அதிகளவு பாதிக்கும் மையோஃபியா
Posted on 01/06/2022
இன்றைய தேதியில் கொரோனாத் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு ஒன்லைன் மூலமான கல்வி கற்கை நெறி நடத்தப்படுகிறது. ஸ்மார்ட்போன் மூலம் மாணவர்கள் ஓன்லைன் கல்வியை மேற்கொள்வதால் அவர்களுக்கு மையோஃபியா எனப்படும் கிட்டப்பார்வை பாதிப்பு அதிக அளவில் ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
கணினி, மடிக்கணினி, செல்பேசி, கையடக்க கணினி போன்ற இலத்திரனியல் சாதனங்களை மாணவர்களும் இளம்பிராயத்தில் பயன்படுத்துவது தற்போது அதிகரித்து வருகிறது. இதில் உள்ள டிஜிட்டல் திரையை குறைந்த தொலைவில் வைத்து அதிகநேரம் பார்வையிடுகிறார்கள். இதன் காரணமாக கருவிழி இயல்பான அளவைவிட கூடுதலாக விரிவடைந்து செயல்படுவதால், கிட்டப்பார்வை கோளாறு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டாகிறது.
பொருளாதார வளர்ச்சியால் எம்முடைய மாணவர்களுக்கு கிட்டப்பார்வை பாதிப்பு அதிகரித்து, இதன் காரணமாக கண்ணாடி அணிய வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஓராண்டிற்கு மேலாக எம்முடைய பிள்ளைகளை வீட்டைவிட்டு வெளியில் அதிகம் செல்ல அனுமதிக்காததன் காரணமாகவும் இத்தகைய பார்வை திறன் குறைவு ஏற்பட்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தெற்காசியா தென்கிழக்காசியா மேற்காசியா போன்ற ஆசிய நாட்டில் உள்ளவர்களின் மரபணு காரணிகளால் கிட்டப்பார்வை பாதிப்பு அதிகமாக ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் விளக்கமளிக்கிறார்கள். கருவிழி, லென்ஸ், விழித்திரை ஆகிய மூன்று இன்றியமையா கண்ணின் உறுப்புகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். கருவிழி அதிக அளவில் விரிவடைந்தால் ஒரே அளவில் அமையப் பெற்றிருக்கும் விழித்திரையில் விரிசல் ஏற்படுவதற்கோ அல்லது சேதமடைவதற்கோ வாய்ப்புகள் உள்ளதால், கிட்டபார்வைத் திறன் குறைவுடையவர்கள் ஆண்டிற்கு ஒரு முறையேனும் கண் மருத்துவ நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும், பார்வைத் திறனை குறித்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என கண் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள் .
டாக்டர். வெங்கடேஷ்
தொகுப்பு: அனுஷா
Tags: News