நவீன கண்காணிப்பு அறை மற்றும் பொதுமக்கள் அழைப்பு மையம் திறக்கப்பட்டன!
Posted on 24/03/2017
மதுரை மாநகராட்சியின் ஆணையாளர் திரு.சந்தீப் நந்தூரி அவர்களை அட்வென்சருக்காக வழக்கமான முறையில் சந்தித்த போது, மதுரை மாநகராட்சி மக்களுக்கு வழங்கப்படுகின்ற பல்வேறு வசதிகளின் நிலைமைகளை தெரிந்துகொள்ளவும்.
அது சம்பந்தமான மேல்நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் மற்றும் பொதுமக்களின் புகார் அழைப்புகளை உடனுக்குடன் பதிவுசெய்து தாமதமற்ற நடவடிக்கைகளை எடுக்கவும் மாநகராட்சி கட்டிடத்திலேயே இரண்டாவது தளத்தில் “நவீன கண்காணிப்பு அறை - பொது மக்கள் அழைப்பு மையம்” முதலானவற்றை கடந்த 18.03. 2017-ம் தேதி சனிக்கிழமையன்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வீரராகவ ராவ் அவர்கள் முன்னிலையில திறந்து வைத்தார். இது சம்பந்தமாக ஆணையர் அவர்கள் மேலும் கூடுதல் விபரங்களையும் தெரிவித்தார்கள்.
“பழைமைமிக்க மற்றும் பல்வேறு வளர்ச்சிகளை ஒவ்வொரு நாளும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றாற்போல் பெற்று வரும் மதுரை மாநகர மக்களுக்காக மதுரை மாநகர கட்டிடத்தில் அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் பொருந்திய “நவீன கண்காணிப்பு அறை மற்றும் பொது மக்கள் அழைப்பு மையம்” திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது மதுரை மக்களுக்கு வசதிகள் வழங்குதல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பில் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும். புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன கண்காணிப்பு மற்றும் பொதுமக்கள் அழைப்பு மையம் ரூபாய் 17.20 லட்சம் மதிப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மதுரை மாநகராட்சியின் செயல்பாடுகளை ஒரே இடத்தில் இருந்து கொண்டு கண்காணிப்பதற்காகவும் மற்றும் பொதுமக்களின் தேவைகள் மற்றும் புகார்களை பெற்று உடனடி தீர்வுகள் வழங்குவதற்காகவும் இந்த விசேஷ அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறையில் நான்கு நவீன டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு ஐந்து கம்ப்யூட்டர்கள் மூலம் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன. குறிப்பாக GPRS கருவி பொருத்தப்பட்டுள்ள குடிநீர் வாகனங்கள் மற்றும் குப்பை அள்ளும் வாகனங்கள் நகரின் எந்த இடத்தில் இருக்கின்றன, நகரின் தெருவிளக்குகள் எரிகின்ற செயல்பாடுகள் ஆகியவற்றை இந்த மையத்தின் மூலமாக அறிந்து உடனுக்குடன் தேவையானவற்றை செய்து குறைகளை நிவர்த்தி செய்ய ஏதுவாகும்.
ஆன்லைன் மூலமாக கட்டிட வரைபடங்கள் அனுமதிகோரி அளிக்கப்பட்ட மனுக்களின் விபரம், அவற்றின்மீது அளிக்கப்பட்ட அனுமதிகளின் விபரங்கள், பொதுமக்களின் மின்னஞ்சல், முகநூல், வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி மூலம் தெரிவிக்கும் புகார்களை கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுத்தல் ஆகியவை இந்த மையத்தின் மூலமாக சாத்தியப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மணலூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் குடிநீர் கொள்ளளவு மற்றும் மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் அளவு ஆகிய அனைத்து செயல்பாடுகளையும் இந்த கண்காணிப்பு அறையில் இருந்துகொண்டே கண்காணிக்க முடியும். அதற்கான அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் இந்த மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த நவீன கண்காணிப்பு அறையில், மாநகராட்சிக்கு சொந்தமான ஒவ்வொரு வாகனமும் எங்கு செல்கிறது, அந்த வாகனங்கள் செல்லும் வேகங்கள், மாநகராட்சியின் குடிநீர் வழங்கும் லாரிகள் பொது மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்கின்றனவா என்பதையும், குடிநீர் மற்றும் குப்பை வாகனங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை பயணம் செய்கின்றன என்பதையும், அவை பயணம் மேற்கொண்ட வழித்தடங்களையும், வேலையை மேற்கொண்டிருக்கும்போது வாகனங்கள் பழுதடைந்த விபரங்கள் ஆகிய அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும் எனவும் இந்த மையம் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்” என்றும் ஆணையர் தெரிவித்தார்.
Tags: News, Madurai News, Academy