தடுமாற்றத்தில் ஜனநாயகம்! புதிய அரசு புத்துணர்ச்சி அளிக்குமா!
Posted on 20/02/2017
ஒரு சிறிய இடைவெளிக்குப்பின், சிறுசிறு பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வுகளைக் கண்டபின், தற்போது தமிழகத்தில் புதிய அரசுடன் ஆட்சி மலர்ந்துள்ளது. ஜனநாயக முறையிலான அரசியலமைப்பில், நிலையான அரசு ஒன்று இயங்கிக்கொண்டிருக்கும்போது மட்டுமே மக்கள் தம்முடைய அன்றாட வாழ்க்கையை நிம்மதியான வகையில் நடத்த முடியும். இதன் அர்த்தம் என்னவென்றால், நடத்திச் செல்லுகின்ற அரசும், நடத்தப்படுகின்ற மக்களும் ஒன்றிணைந்துதான் “சமுதாய இயக்கத்தை” மேற்கொள்கின்றார்கள்.
தற்போது தமிழகத்தில் எடப்பாடி திரு.பழனிச்சாமி அவர்களின் தலைமையில் பொறுப்பேற்றிருக்கும் அரசானது, சட்டசபையில் தம்முடைய பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. மக்களுக்காக செய்யப்படவேண்டிய, உடனடி கடமைகளாக மிகப் பலவும் உள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றை நாம் சொல்ல வேண்டுமென்றால், மழை பொய்த்ததால் தமிழ்நாட்டில் நிலவிவரும் கடுமையான வறட்சி, விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம், ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் நிலவிவரும் குடிதண்ணீர் பஞ்சம், குடிமைப்பொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் குளறுபடிகளும் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளுக்கு உடனடியாக கொள்முதல் செய்யப்படவேண்டிய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் முதலியனவாகும்.
மக்களின் ஏகோபித்த கருத்துக்களுக்கு இடமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரேமுகமாக புதிய அரசுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்ததிலிருந்தே, தமிழ்நாட்டின் மக்கள் நிலையானதொரு முடிவினை எடுக்க முடியாத குழப்பமானதொரு சூழ்நிலையில் இருந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் தம்முடைய தொகுதிகளுக்குச் செல்லும்போது மக்களின் அணுகுமுறை எப்படி இருக்கப்போகிறது என்பது தான் “ஆயிரம் டாலர்” கேள்வியாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: News, Madurai News, Lifestyle