தற்போது நிலவிவரும் நிலைமை மாறுவது எப்போது?
Posted on 21/12/2016
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததிலிருந்து ரிசர்வ் வங்கி பலவித நிபந்தனைகளை திடீர்திடீரென அறிவித்த வண்ணம் உள்ளது.
அதன்படி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் டிசம்பர் 15-ம் தேதிக்கு பிறகு வங்கியில் மட்டுமே செலுத்த முடியும் என அறிவித்திருந்திருந்த நிலையில் ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு ஒன்றை அறிவித்துள்ளது. அதில், ’இனி ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் ரூ.5000 க்கும் மேல் பழைய நோட்டை டெபாசிட் செய்வோர் முறையான காரணத்தை வங்கி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘தனித்தனியாக குறுகிய காலகட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் பழைய நோட்டுகளின் தொகை 5000-த்தை தாண்டினால் அதற்கான விளக்கமும் கொடுக்க வேண்டும்.’ என்றும் அறிவித்துள்ளது.
மேலும், அவசர பணத்தேவைக்காக நகையை அடகு வைத்தால், பணம் முழுவதுமாக அளிக்கப்படாமல், வங்கிக்கணக்கில் சேமித்து வைக்கப்பட்டு, பின் சிறிதுசிறிதாக அளிக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதனால், என்ன பயன்? இன்று ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவருக்கே தம்முடைய வீட்டின் தேவைகள் குறைந்தது 10,000 மேல் இருக்கிறது. இந்நிலையில் ஒரு ஏடிஎம் கார்டில் இருந்து குறிப்பிட்ட ஒரு தொகையை மட்டுமே எடுக்க முடியும் என்பது அவர்களின் குடும்பத் தேவைகளை மிகவும் பாதிக்கிறது.
நமது பிரதமரின் கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அதற்காக அவர் எடுக்கும் நடவடிக்கைகள் ஊழல் பெருச்சாலிகளை விட, சாதாரண மக்களையே அதிகம் பாதிக்கின்றது. ஏ.டி.எம் வாசலில் நிற்கும் பெரும்பாலானோர் முணுமுணுக்கும் கேள்வி ‘இதில் ரூ.100 நோட்டு வருகிறதா?’ என்பது தான். அப்படி பணம் வந்தால், அதனை பெற குறைந்தது 50 பேர் கொண்ட வரிசையில் நிற்க வேண்டிய கட்டாய நிலையில் மக்கள் தள்ளப்படுகின்றனர். இன்னும் போதிய புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாதது தான் இதற்கு காரணமா? அப்படியென்றால் தற்போது சில கருப்பு முதலைகளிடம் மட்டும் கோடிகோடியாக புது ரூபாய் நோட்டுகள் எவ்வாறு பதுக்கப்படுகிறது? என்கிற ஒரு கேள்விதான் விடை தெரியாத மர்மமாய் நம்மிடம் நீள்கிறது.
Tags: News, Art and Culture