அடுத்த ஆண்டுகளில், மதுரையை மிரட்டவிருக்கும் வறட்சி!
Posted on 14/12/2016
வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மதுரைக்கு குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை மற்றும் பெரியார் அணை பகுதியில் தென் மேற்கு பருவ மழை, வடகிழக்குப் பருவ மழை பொய்த்து போனதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த அக்., 20ம் தேதி 22 அடியாக குறைந்ததையடுத்து, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 40 கனஅடியாக குறைக்கப்பட்டது. அன்றூ முதல் மதுரைக்கு 4 நாட்கள் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் சில நாட்கள் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 1.5 அடியாக அதிகரித்தது. அதன பினபு மழையின் அளவு குறைந்து போனதால் நீர்மட்டமும் குறைய தொடங்கியது.
வடகிழக்கு பருவ மழையின் போது உருவாகும் புயலால் அணைப் பகுதியில் நல்ல மழை பெய்யும் ஆனால் தற்போது வரை உருவாகிய புயலால் அணைப்பகுதியில் மழை பெய்ய வில்லை. எனினும் வரும் நாட்களில் வைகை அணைப்பகுதியில் மழை பெய்தால் மட்டுமே மதுரை மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றன. டிச., 30க்குள் மழை பெய்தால் மட்டுமே மதுரையின் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும். தற்போதுள்ள நிலையில் 22 அடி தண்ணீரில் 11 அடிக்கு வண்டல் மண் நிறைந்துள்ளது. இதிலிருந்து 8 அடி தண்ணீர் தான் எடுத்து உபயோகித்து கொள்ள முடியும். மீதமுள்ள 3 அடி தண்ணீரை உபயோகப்படுத்த முடியாது. இப்போதே மாநகராட்சி 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் என அறிவித்துள்ள நிலையில், குடிநீர் குழாய் பராமரிப்பு என டிச., 19,20 ல் குடிநீர் வினியோகத்தை நிறுத்த உள்ளது. இதனால் மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சூழல் நிலவி வருகிறது.
பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 110.70 அடி. நீர்வரத்து 152 கனஅடி. 200 கனஅடி வைகை அணைக்கு திறந்து விடப்படுகிறது. வைகை அணைக்கு 52 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. இதில் மதுரையின் குடிநீர் தேவைக்காக 40 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வடகிழக்கு பருவ மழை பொய்த்து வருவதால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மதுரை மக்களின் குடிநீருக்கு கேள்விக்குறியாகி உள்ளது.
Tags: News, Madurai News