உணவு தானிய தட்டுப்பாட்டிற்கு மேற்கத்திய நாடுகளே காரணம் - ரஷ்யா குற்றச்சாட்டு!
Posted on 17/06/2022
உலகில் அதிகரித்து வரும் உணவு தானிய தட்டுப்பாடு ரஷ்யாவின் தற்போதைய நடவடிக்கையால் ஏற்பட்டது அல்ல, இவை முழுக்க முழுக்க மேற்கத்திய நாடுகளின் தவறுகளால் ஏற்பட்டது என ரஷ்ய அரசின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போரினால், அதிகரித்து வரும் உரங்கள், உணவு தட்டுப்பாடு, எண்ணெய் மற்றும் எரிவாயு விலையேற்றம் ஆகிய காரணங்களால் பல்வேறு உலக நாடுகளின் பொருளாதாரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு சரிவை சந்தித்து வருகிறது.
இதற்கு ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு பொருள்களின் மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையும், உலகின் உணவுத் தானிய உற்பத்தியில் முக்கிய நாடான உக்ரைனின் துறைமுகத்தை ரஷ்யா சிறைப்பிடித்து வைத்து இருப்பதுமே முக்கிய காரணங்களாக கூறப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், வெள்ளிக்கிழமையான இன்று RIA செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ரஷ்யாவின் செய்திதொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov), உலகின் தற்போதைய உணவு தானிய மற்றும் உரங்களின் தட்டுப்பாட்டிற்கு முழுக்க முழுக்க மேற்கத்திய நாடுகளின் தவறுகளே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
இதுத் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தில், தற்போதைய நெருக்கடிக்கு ரஷ்யா முழுமையான காரணம் இல்லை, மேலும் உணவு பொருள்களின் விலையேற்றத்திற்கு அதிகரிக்கும் பணவீக்கமும், கடந்த சில ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளின் தவறுகளும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளுமே காரணம் என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இன்று அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் தெரிவித்த தகவலில், ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் உக்ரைனிய துறைமுகத்தில் இருந்து பாதுகாப்பாக தானியங்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா ஒத்துழைப்பு தரும் என தெரிவித்தார்.
Tags: News