துபாய் பறந்த இம்ரான் கானின் பினாமி மீது எதிர்க்கட்சிகள் புகார்!
Posted on 07/04/2022
பார கானிடம் மட்டும் 32 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஊழல் பணம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன.
90,000 அமெரிக்க டாலர் பணத்துடன் இம்ரான் கான் மனைவியின் தோழி பார கான் துபாய் சென்றுள்ளதாக அந்நாட்டு எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டி வருகின்றன.
பாகிஸ்தானில் குழப்பமான அரசியல் சூழல் தற்போது நிலவிவருகிறது. அன்மைக்காலமாக பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், ராணுவ தலைமைக்கும் அரசுக்கும் இடையே பூசல் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவந்தனர்.இம்ரான் அரசு கவிழ்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தை கலைக்க இம்ரான் கான் பரிந்துரை செய்தார். இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரை இம்ரான் கான் காபந்து பிரதமராக செயல்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது. இம்ரான் கான் அரசு பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு வைத்துவரும் நிலையில், தற்போது இம்ரான் கான் மனைவியின் தோழி வெளிநாடு சென்றுள்ள சம்பவம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இம்ரான் கானின் மனைவியான புஷ்ரா பிபியின் தோழி, பரா கான் பாகிஸ்தானிலிருந்து சொகுசு விமானம் மூலம் துபாய் சென்றுள்ளார்.அவர் விமானத்தில் பயணிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது. பரா கானின் காலுக்கு அடியில் ஒரு சொகுசு பை தெரியும் நிலையில், அந்த பையில் 90 ஆயிரம் டாலர் பணத்தை எடுத்து பரா கான் தப்பிச் சென்றதாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் முன்னணி தலைவர் ருமினா குர்ஷித் ஆலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மகளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் துணைத் தலைவருமான மரியம் நவாஸ் இம்ரான் கானுக்கு எதிராக தொடர்ந்து ஊழல் புகார்களை தெரிவித்துவருகிறார். இம்ரான் கான் மற்றும் அவரின் மனைவியின் பினாமியாக செயல்பட்டுவரும் பரா கான் அந்நாட்டு அலுவலர்களிடம் பணியிட மாற்றம் பணி நியமனம் ஆகியவற்றுக்காக கோடிகளில் லஞ்சம் பெற்றுள்ளதாக மரியம் குற்றம்சாட்டியுள்ளார். பார கானிடம் மட்டும் 32 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஊழல் பணம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன.
தற்போது இம்ரானின் அதிகாரம் பறிபோனதால் தனது ஊழல் வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் பரா கானை வெளிநாட்டு அனுப்பிவைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. மேலும், இம்ரான் கான் நாடாளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதமானது எனவும் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடுத்துள்ளனர்.
Tags: News