அமெரிக்காவின் தடைகளை தவிர்க்க சீனா விருப்பம்
Posted on 16/03/2022
ரஷ்ய போர் தொடர்பாக அமெரிக்கா விதித்திருக்கும் தடைகளின் தாக்கத்தை தவிர்க்க விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது. “சீனா நெருக்கடி தரும் நாடு கிடையாது. அதேபோல தடைகள் தன்னைப் பாதிப்பதை சீனா விரும்பாது,” என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மேனுவலிடம் திங்கட்கிழமை தொலைபேசி வாயிலாக அவர் இதனைத் தெரிவித்தார்.
உக்ரேன் பேர் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தபோது பேசிய திரு வாங், தனது சட்ட உரிமைகளைப் பாதுகாக்க சீனாவுக்குத் தெரியும் என்றும் அது அதன் உரிமை என்றும் கூறினார்.
இதற்கிடையே, ரஷ்யா படையெடுக்கத் தொடங்கியது முதல் 1.4 மில்லியன் குழந்தைகள் உக்ரேனிலிருந்து வெளியேறி இருப்பதாக ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு வினாடிக்கு கிட்டத்தட்ட ஒரு குழந்தை அகதியாக மாறி வருவதை இந்த நிலவரம் உணர்த்துவதாகவும் அது குறிப்பிட்டது. “சராசரியாக தினமும் 70,000 குழந்தைகள் உக்ரேனிலிருந்து அகதியாக வெளியேறுகின்றனர்,” என ஐநா குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப்பின் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் ஜெனிவாவில் தெரிவித்தார். “இதனை நிமிடத்திற்கு 55 குழந்தைகள் அல்லது வினாடிக்கு ஒரு குழந்தை என கணக்கிடலாம்,” என்றார் அவர்.
Tags: News