ரங்காவின் கட்டுப்படாத கை!
Posted on 09/05/2022
நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகி விரைவில் வெளியாகவிருக்கும் 'ரங்கா' படத்தில், அவரது வலது கை கட்டுப்பாட்டில் இல்லாதவராக நடித்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அறிமுக இயக்குநர் வினோத் டி எல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'ரங்கா'. இதில் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நிகிலா விமல் நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் வெளியான 'கிடாரி', 'வெற்றிவேல்' , 'தம்பி 'ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுடன் சதீஷ், மோனிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ராம் ஜீவன் இசையமைத்திருக்கிறார். திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை பாஸ் மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டத்தை அண்மையில் நடிகர் கார்த்தி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இந்தப்படத்தில் நாயகனுக்கு ஏலீன் ஹேன்ட் சின்ட்ரோம் என்ற பாதிப்பு இருக்கும். அதாவது அவருடைய மூளையின் கட்டுப்பாட்டில் முழு உடலும் இயங்கினாலும், இந்த வகை பாதிப்பால் அவரது வலது கை மட்டும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்காது. இத்தகைய பாதிப்புள்ள ஒருவர் திருமண வாழ்க்கையின் தொடக்கமான தேனிலவை கொண்டாடுவதற்காக காஷ்மீர் செல்கிறார். அங்கு நடைபெறும் சம்பவங்களும், அவருடைய கட்டுப்படாத கையின் நடவடிக்கையும் தான் படத்தின் திரைக்கதை. காஷ்மீர் பின்னணியில் இதுவரை சொல்லப்படாத திரைக்கதை என்பதால் ரசிகர்களுக்கு 'ரங்கா' புதிய விருந்தாக இருக்கும்'' என்றார்.
நாயகன் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாலும், இது எக்சன் நாயகனுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதாலும், மே 13ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் சிபி சத்யராஜின் 'ரங்கா' படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
Tags: News