“சீக்கிரமா படிச்சு, வேகமா வேலைக்குப் போங்க”
Posted on 16/03/2017
அமெரிக்கா போன்ற உலகின் வளர்ந்த நாடுகளில் 60 முதல் 80 சதவீதம் மக்கள் தொழில் செய்கின்றார்கள். ஆனால் நம் இந்திய நாட்டில் மட்டும் 60 முதல் 80 சதவீதம் மக்கள் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் தொழிலாளி மனப்பான்மைதான் இந்தியர்கள் மனதில் மேலோங்கி நிற்கிறது. பெரும்பாலான நபர்கள் 3, 4, 5, 7 வருடங்கள் என, நீண்ட கால படிப்பினை எடுத்து தன் வாழ்நாளில் கல்வி அறிவிற்கு மட்டும் அதிக காலங்களை செலவழிக்கிறார்கள். இவர்கள். அனைவரும் எவ்வளவுதான் கல்வி அறிவை எடுத்துக் கொண்டாலும் அல்லது படிப்பில் மாநிலத்திலேயே முதலிடம் வந்தாலும், நிறுவனங்களில் சென்று வேலை பார்க்கும் போது புதியதாக கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.
ஒவ்வொரு அமைப்பிற்கும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும், தனித்தனி விதமாக, தனிப்பட்ட முறையில் வேலை செய்ய வேண்டியிருக்கும். இன்றைய காலத்தில், பெரும்பாலான மாணவர்களுக்கு மனப்பாடத் திறன்கள்தான் அதிகமாக உள்ளது. இதற்கு அவர்களது ஆசிரியர்களும் காரணமாக இருக்கிறார்கள். அனுபவம் மற்றும் செய்முறை அறிவு என்பது இன்றைய மாணவர்களுக்கு மிகவும் குறைவே. இவ்வளவு வருடங்கள் படித்த பிறகும் கூட, மேலும் கூடுதல் திறனை வளர்ப்பதற்காக மீண்டும், மீண்டும் படித்து ஏறக்குறைய 10 முதல் 15 வருடங்கள் கல்விக்காகவே அவர்களால் வீணடிக்கப்படுகின்றன. எனவே இங்கு ஒருவரது இளமைக் காலங்கள் சிதறடிக்கப்படுகின்றன. இளமை வயது சுதந்திரங்கள் கல்வி என்று ஒன்றால் முறியடிக்கப்படுகின்றன.
தற்போது ஒரு மாதம், 3 மாதங்கள், 6 மாதங்கள், 1 வருடம், 2 வருடங்கள என குறைந்த காலத்திலேயே படிப்பை முடித்துவிட்டு, படித்த உடனேயே வேலைக்குச் செல்லும் 100க்கு மேற்பட்ட கல்வித் துறைகளும், கல்வி நிறுவனங்களும் வந்துவிட்டன. அதாவது நர்சிங் துறை, ஹோட்டல் துறை, தையல் துறை போன்ற படிக்கும்போதே சம்பாதிக்கக்கூடிய பலதரப்பட்ட துறைகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட தொழிற்கல்வி சம்மந்தமான படிப்பை நாம் எடுத்துப் படிக்கும்போது எளிதில் வேலைக்குப் போகலாம். சொந்தமாக தொழிலும் செய்யலாம். வேலைக்குச் செல்லும் ஒருவரது வாழ்க்கை குறிப்பிட்ட எல்லைக்குள் ஒருவரின் வாழ்க்கையின் எல்லையை, அவரே நிர்ணயித்துக் கொள்ளமுடியும். வாழ்க்கையை முழுமையாகவும், சந்தோசமாகவும் அனுபவிக்கவும் முடியும்.
எந்தவொரு வேலைக்கும் 30 சதவீதம் மட்டுமே நீங்கள் படித்த கல்வி உதவியாக இருக்கும். மீதமுள்ள 70 சதவீதம், மேலாண்மைத் திறன்கள்தான் ஒருவருக்கு தேவைப்படுகிறது. எனவே படிப்பறிவு என்பது குறைந்த அளவுதான் வேலை வாய்ப்பிற்கு உதவும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எதிர்காலத்தில், 100க்கு 10 சதவீதம் பேர் மட்டுமே உற்பத்தி துறையில், வேலையில் ஈடுபடுவார்கள். 20 சதவீதம் பேர் உணவு மற்றும் விவசாயம் சம்மந்தமான துறையில் வேலை செய்வார்கள். மீதமுள்ள 60 முதல் 70 சதவீதம் பேர் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தால் மட்டுமே வருமானம் ஈட்ட முடியும்.
இதுவரை கூறப்பட்ட கருத்தானது உடனே வேலைக்கு போக விரும்புபவர்கள், நீண்ட காலம் படிக்க விரும்பாதவர்கள், வித்தியாசமான படிப்பு படிக்க விரும்புபவர்கள், தொழிற்கல்வி கற்க விரும்புபவர்கள் போன்ற விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும்.
எனக்குத் தெரிந்து 4 வருடம் இன்ஜினியரிங் படித்து முடித்த ஒருவரின் சம்பளத்திற்கு சமமாக, 2 வருடங்கள் மட்டுமே ஐடிஐ படித்த ஒருவர் தனது அனுபவத்தின் மூலம் அவருக்கு இணையாக வருமானம் சம்பாதிக்கிறார். ஏனென்றால் அவர் அதிக வருடங்கள் சம்பளத்திலும், குறைவான வருடங்கள் படிப்பிலும் செலவு செய்திருக்கிறார். எனவே தரமான மற்றும் சிறப்பான தனித்திறமையும், புத்திசாலித்தனமும் உள்ள நீங்கள் மிகக் குறைவான நேரத்தில் படித்து விட்டு, நல்ல வேலை வாய்ப்பையோ அல்லது சுய தொழிலையோ செய்து வாழ்க்கையில் விரைவில் முன்னேறி விடுங்கள். வாழ்க்கையின் அர்த்தத்தை விரைவில் பெற்று விடுங்கள். சந்தோஷமான வாழ்க்கையை நீண்ட காலம் நடத்துங்கள். அனைத்து வாழ்க்கைக் காலங்களையும் சரியான முறையில் அனுபவியுங்கள்.
மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு ஆலோசகர்: 8940055990
Tags: News, Lifestyle, Academy, Education