தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்!
Posted on 11/03/2021
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. நாளை (மார்ச் 12) காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. எனவே சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் உரிய விவரங்களுடன் வேட்புமனு தாக்கலுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் அலுவலகத்திற்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்யும் போது பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.
வேட்பாளர்கள் தங்களுடன் இரண்டு நபர்களை மட்டுமே உடன் அழைத்து வர வேண்டும். எனவே அவற்றை தீவிரமாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வரும் மார்ச் 19ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இடையில் வரும் சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாகும்.
எனவே அன்றைய தினங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. இதற்கேற்ப வேட்பாளர்கள் தயாராகிக் கொள்ள வேண்டியது அவசியம். வரும் 20ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள 22ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 5 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம்.