அரசு ஊழியர்கள் வீடு கட்ட ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லாமல் கடன் பெறலாம்
Posted on 07/03/2022
தமிழக அரசு ஊழியர்கள் பரிசாகப் பெறுவதற்கான உச்ச வரம்புத் தொகையை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கோ அல்லது புதிய வீட்டை வாங்குவதற்கோ உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் வட்டி இல்லாமல் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம் எனவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் துறை வெளியிட்ட அரசாணையில், உறவினர்கள், நண்பர்களிடமிருந்து திருமணம், பிறந்தநாள், மதம் சார்பிலான பண்டிகைகள், இறுதிச் சடங்கு போன்றவற்றிற்குப் பரிசாக ரூ.25,000 வரை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம், பிறந்தநாள், வீடு குடிபுகுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது அரசு ஊழியர்கள், தங்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடமிருந்து பரிசு பெறுவதற்கு விதிமுறைகள் உள்ளன. அதன்படி, பரிசுத் தொகையாக ரூ.5,000 வரை மட்டுமே பரிசு பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தொகையை ஐந்து மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மொத்தத்தில் பரிசாக பெறக் கூடிய தொகையின் மதிப்பு ரூ.10 லட்சம் அல்லது 6 மாத மொத்த ஊதியம் இதில் எது குறைவோ அந்த தொகையாக இருக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கோ அல்லது புதிய வீட்டை வாங்குவதற்கோ உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் இருந்து வட்டி இல்லாமல் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: News