சட்டசபை தேர்தலுக்கு அதிகாரிகள் நியமனம்!
Posted on 27/01/2021
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, 234 தொகுதிகளுக்கும், தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக சட்டசபையின் பதவிக்காலம், மே, 25ல் நிறைவடைகிறது. எனவே, ஏப்ரல் அல்லது மே மாதம் துவக்கத்தில், சட்டசபை தேர்தல் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரியாக, சென்னையில் மாநகராட்சி கமிஷனர், மற்ற மாவட்டங்களில், மாவட்ட கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது, கொரோனா காலம் என்பதால், அந்தத் தொற்று பரவலை தடுக்க, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, கூடுதலாக, 23 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே, கூடுதலாக தேர்தல் பணிக்கு, எவ்வளவு ஊழியர்கள் தேவை, பாதுகாப்பு பணிக்கு எவ்வளவு காவலர்கள் தேவை என்ற விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
மக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, பிரபலங்களை வைத்து குறும்படங்கள் தயாரிக்கும் பணியும், துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள் அச்சிடும் பணியும் நடந்து வருகின்றன.