இந்திய அணி அபார வெற்றி!
Posted on 30/07/2022
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்த இரு அணிகள் மோதும் டி20 தொடர் நேற்று தொடங்கியது. ட்ரினிடாட் பிரெய்ன் லாரா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியி்ல் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. காயம் காரணமாக கே.எல் ராகுல் இந்த டி20 தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு மாற்று வீரராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனாலும், அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து, சூர்யகுமார் யாதவ் ஓப்பனிங் இறங்கினார். சற்று நல்ல தொடக்கம் கிடைத்தாலும், சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தன. ரோஹித் சர்மாவை தவிர மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். ரோஹித் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இறுதியில், தினேஷ் கார்த்திக்கும் அதிரடியாக ஆடி பினிஷிங் செய்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. ரோஹித் 44 பந்துகளில் 64 ரன்களும், தினேஷ் 19 பந்துகளில் 41 ரன்களும் எடுத்தனர்.
191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, தொடக்கந்தில் இருந்தே, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி திணறியது. 20 ஓவர்கள் முடிவில், அந்த அணியால் 8 விக்கெட்கள் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணித் தரப்பில் ரவிச்சந்நிரன் அஸ்வின், ரவி பிஷோனி, அர்ஸ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்கிக் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணி 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. இந்த இரு அணிகள் மோதும், இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற உள்ளது.
Tags: News