விளையாட்டில் வெற்றி பெற உடற்பயிற்சி அவசியம்! ஷரத்கமல்
Posted on 11/08/2022
இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்று 3 தங்கம், 1 வெள்ளி பதக்கங்களை வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் டெல்லியில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்கள், ஷரத்தின் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் பெருந்திரளாக கூடி, வெற்றி வீரருக்கு மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்றனர். ஷரத் கமல் படித்த பள்ளி சார்பில் தாமரை மலர் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்கமகன் ஷரத் கமலுக்கு சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
பின்னர் சரத்கமல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், உடற்பயிற்சி மிக முக்கியமானது என்றும், வயது அதிகமாக ஆக, நான் சிறப்பாக விளையாடுகிறேன் என்று தெரிவித்தார்.
22-வது காமன்வெல்த் போட்டிகளில் அறையிறுதிக்கு பிறகு அதிக நம்பிக்கையோடு விளையாடினேன். கடினமாக ஆரம்பித்த போட்டி பின் சிறப்பாக அமைந்தது. 2006ம் ஆண்டு 2 தங்கம் வென்றிருந்தேன். இந்த முறை 3 தங்கம் வென்றுள்ளேன் என்று ஷரத் கமல் தெரிவித்தார்.
இந்த போட்டி வாழ்க்கையில் சிறப்பான போட்டியாக அமைந்தது. விளையாட்டிற்கு தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி முக்கியத்துவம் வழங்க வேண்டும். மைதானங்கள் அதிகமாக உருவாக்கி தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஷரத் கமல் கோரிக்கை விடுத்தார்.
விளையாட்டு வீரர்கள், வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெறுவது முக்கியம். சிறுவயது முதல் விளையாட்டை முதன்மையாக எடுக்க முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது. படிப்பு முக்கியமானதாக இருப்பதால், விளையாட்டில் மாணவர்களுக்கு கவனம் செலுத்த முடிவதில்லை என்று அவர் தெரிவித்தார்.
சிறுவயதில் தன்னோடு இருந்தவர்கள் தன்னை விட சிறப்பாக விளையாட கூடியவர்கள். ஆனால் அவர்கள் படிபுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விளையாட்டை தள்ளி வைத்ததால்தான் திறமையானவர்களால் விளையாட்டை தொடர முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
தனது விளையாட்டைப் பற்றி பேசிய ஷரத் கமல், இளம் வயதை விட வயசாக வயசாக சிறப்பாக விளையாடுகிறேன் என்று தெரிவித்தார். எதிர் வரக்கூடிய சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று நாட்டிற்கு பதக்கங்களை வென்று தருவேன் என கூறினார்.
காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம், 1 வெள்ளி பதக்கங்களை வென்ற ஷரத் கமலின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுமா?
Tags: News