நீரஜ் சோப்ரா ரிட்டன்ஸ்!

நீரஜ் சோப்ரா ரிட்டன்ஸ்!

ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா தனது அடுத்த டார்கெட் குறித்து பேசியுள்ளார்.

கடந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் 2021 ல் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தினை பெற்றுத் தந்தார். இந்தப் பயணம் இந்த தங்கப் பதக்கத்தோடு நின்று விடாமல் இருப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்று கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் பயிற்சியை முடித்துக் கொண்ட சோப்ரா, நேற்றைய முன்தினம் அமெரிக்காவிலிருந்து மும்பைக்கு விமானம் மூலம் வந்துள்ளார்.
 
மும்பை வந்திறங்கிய நீரஜ் சோப்ராவை வரவேற்க விமான நிலையத்தில் ரசிகர்கள் உட்பட ஊடகங்களும் கூடியிருந்தன. எனவே, அப்போது ஊடகங்களுக்கு பேட்டியளித்த நீரஜ் சோப்ரா, "டோக்கியோ ஒலிம்பிக்கில் நான் கொண்டிருந்த அதே வேகம் நிறைந்த விளையாட்டை இனி விளையாடவுள்ள அனைத்து இடங்களிலும் கொண்டு வருவதற்கு கடுமையான பயிற்சிகளை எடுத்துள்ளேன். என்னுடைய அடிப்படை திறனாக இருக்கக் கூடிய ஓடுதல் மற்றும் குதித்தலில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறேன். இந்த பயிற்சிகள்தான் ஈட்டி எறிதலில் உள்ள சில நுட்பங்களையும் மேம்படுத்துவதற்கு தேவையான வலிமையினை எனக்கு கொடுத்தது. அதேசமயம் நான் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்த வேகத்தினை கொண்டு வருவதற்கு எண்னை நானே கட்டாயப்படுத்தி பயிற்சி எடுக்கவில்லை. ஏனென்றால், உலக சாம்சியன்ஷிப் போட்டிக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
 
மேலும், "அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிலே பயிற்சி பெற்றது எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால், அமெரிக்காவின் காலநிலை மற்றும் தட்பவெப்ப நிலைகளை என்னால் அதிகளவில் உணர முடிந்தது. இதனால், அதற்கு ஏற்றார்போல என்னால் சிறப்பாக விளையாட முடியும்" என்று கூறினார். அதேசமயம் தான் எடை அதிகரித்ததை பற்றி நகைச்சுவையாக பேசியுள்ளார்.
 
இதுகுறித்து நீரஜ் கூறுகையில், "அதிகரித்த எனது உடல் எடையினை குறைப்பதற்கு தேவையான பயிற்சிகளை எடுக்கும் போதெல்லாம் நான் சோர்வடைந்து விட்டதாக உணர்ந்தேன். இதனால், இந்த உடல் எடை குறைக்கும் பயிற்சிகள் எனக்கு சவால் நிறைந்த ஒன்றாக இருந்தது. இருந்தாலும் நான் அந்த பயிற்சிகளை ரசித்து செய்தேன்' என்று கூறியுள்ளார்.
 
அடுத்தடுத்து நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளும்போது தேவைப்படும் பயிற்சிகள் தனக்கு எந்த அளவில் சவாலாக இருந்தது என்பது குறித்தும் பேசியுள்ளார். அதில், "நாம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்தால், அதனை செய்வது மிக எளிதாகத் தான் இருக்கும். ஆனால், உடல் எடை குறைந்தாலும் முன்பிருந்த அதே உடல் வலிமையினை கொண்டிருப்பது என்பது தான் கடினமான ஒன்று. அதேநேரம் இதற்கு சில நுட்பங்கள் இருக்கின்றன. இந்த நுட்பத்தினை பயன்படுத்தி எனது பயிற்சியினை மேற்கொண்டு அதனை முழு வலிமையோடு பயன்படுத்த சரியான நேரம் இதுதான்" என்றும் கூறியுள்ளார்.
 
வரும் ஜூலை 15 ல் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதை தனது முதன்மை இலக்காக வைத்துள்ள நீரஜ் சோப்ரா, இந்த ஆண்டிலே நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top