காஷ்மீரில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளர் சுட்டுக்கொலை!
Posted on 03/06/2022
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு பேர் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் பணிபுரியும் ராஜஸ்தானைச் சேர்ந்த வங்கி மேலாளர் விஜய் குமார் பயங்கரவாதிகளால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். Ellaquai Dehati Bank என்ற வங்கியில் பணியாற்றி வரும் இவரை பயங்கரவாதிகள் குறிவைத்து கொலை செய்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் கோபால்பூரா பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை கொல்லப்பட்ட நிலையில், தற்போது வங்கி மேலாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான, காஷ்மீர் விடுதலை வீரர்கள் அமைப்பு இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. காஷ்மீரில் வசிக்கும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு இதே கதி தான் நேரும் என எச்சரித்துள்ளனர். உயிரிழந்த விஜய் குமார் ராஜஸ்தான் மாநிலத்தின் அனுமன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இந்த படுகொலைக்கு ஜம்மு காஷ்மீர் பாஜக செய்தித் தொடர்பாளர் அல்தாப் தாக்கூர், முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தியும் ட்விட்டரில், காஷ்மீரில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி அமைதியை நிலை நாட்டுவதில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் இந்த படுகொலைக்கு வருத்தமும் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலை நாட்ட பாஜக அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டிய அவர், குடிமக்களின் பாதுகாப்புக்கு பாஜக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் 118 டிகிரி செல்சியஸில் வாட்டி வதைக்கும் வெயில்... குடிநீர் தட்டுபாட்டால் தவிக்கும் பொதுமக்கள்
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு பேர் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை ஆசிரியை ரஜினி பாலா என்பவரும், கடந்த வாரம் டிவி கலைஞர் அம்ரீன் பட் என்பரும், மே 12ஆம் தேதி ராகுல் பட் என்ற அரசு ஊழியரும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
அதேபோல கடந்த ஒரு மாத காலத்தில் 22க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை பாதுகாப்புத்துறை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், பயங்கரவாதிகளைக்களையும் செயல்பாட்டை பாதுகாப்பு படையினர் துரிதப்படுத்தியுள்ளதாகவும், ஜம்ம காஷ்மீர் காவல் தலைவர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
Tags: News