பெரிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்ததற்கு பின்னணியில் இருந்தவர்?
Posted on 11/11/2016
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்ததன் பின்னணியில் ஒரு நபர் உள்ளார். சில மாதங்கள் முன்பு, டெல்லியில் பிரதமரை சந்தித்து கருப்பு பணத்தை ஒழிக்க ஆலோசனை கூறிய அவருக்கு முதலில் கொடுக்கப்பட்டது 9 நிமிட அப்பாயின்மென்ட். ஆனால், அவரது விளக்கத்தால் கவரப்பட்ட மோடி, தொடர்ந்து ஆலோசனை நடத்த ஆரம்பித்ததன் விளைவு, இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது.
இப்படி, பிரதமரையே வியப்பில் ஆழ்த்தி ஐடியா கொடுத்த அந்த நபர் பெயர் அனில் போகில். புனே நகரை சேர்ந்த நிதி ஆலோசகர். அனில் போகில் பிரசன்டேசன் மூலம் பிரதமருக்கு சில ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.
அந்த ஆலோசனைகளில் முக்கியமானவை இவைதான்:
*இறக்குமதி வரியை தள்ளுபடி செய்யுங்கள். 56 வகை வரி விதிப்புகளை ரத்து செய்யுங்கள்.
*ரூ.1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மட்டுமின்றி 100 ரூபாய் நோட்டுக்களையும் தடை செய்ய வேண்டும்.
*அனைத்து வகை பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் வழியாக, செக், டிடி மற்றும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற வேண்டும்.
*வருவாய் வசூல் சிங்கிள் பேங்க் சிஸ்டம் மூலமாகவே நடைபெற வேண்டும்.
இதுபோன்ற ஐடியாக்களைத்தான் அனில் போகில் கொடுத்திருந்தார்.
இந்தியாவில் தினமும் சராசரியாக 2.7 லட்சம் கோடி மதிப்புள்ள பணம் பரிவர்த்தனையாகிறது. அதாவது ஆண்டுக்கு ரூ.800 லட்சம் கோடி. இதில் 20 சதவீத பரிவர்த்தனைகள் மட்டுமே வங்கிகள் வழியாக நடைபெறுகிறது.
எனவே கருப்பு பணத்தை கண்காணிக்க முடிவதில்லை. நாட்டின் 78 சதவீத மக்கள் தினசரி சராசரியாக 20 ரூபாய் செலவிடுவதாக புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது.
எனவே பெரிய முகமதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் அவர்களுக்கு தேவையில்லை என அரசு கருதுகிறது.
Tags: News, Lifestyle, Academy