குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு ‘பிரிவு உபசார விருந்து’!
Posted on 23/07/2022
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் நிறைவடைய உள்ளது. இதையடுத்து அவருக்கு பிரதமர் மோடி பிரிவு உபசார விருந்து அளித்தார்.
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் வருகிற 25ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து நாட்டின் அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் தரப்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த 21ம் தேதி நடைபெற்றது. அதில் திரௌபதி முர்மு 64 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் நாட்டின் அடுத்த குடியரசு தலைவராக பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் 25ம் தேதி இவர் குடியரசு தலைவராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், தற்போதைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் 25ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து நேற்று அவருக்கு பிரதமர் மோடி பிரிவு உபசார விருந்து அளித்தார். இந்நிகழ்ச்சியில், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags: News