இந்திய பொருளாதாரம் இலங்கையை விட மோசமாக உள்ளது!
Posted on 06/04/2022
இந்தியாவின் பொருளாதாரம் இலங்கையை விட மோசமாக உள்ளது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம் இலங்கையை விட மோசமாக உள்ளது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இலங்கையின் கடன் அதிகமாகி, அந்நியச் செலாவணி கையிருப்பு தீர்ந்துபோனதால் இலங்கை இத்தகைய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. நெருக்கடியைச் சமாளிக்க சீனா, இந்தியா போன்ற நாடுகளில் இலங்கை கூடுதலாகக் கடன் வாங்குகிறது. சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருப்பதால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பால், சர்க்கரை, முட்டை, பெட்ரோல், டீசல், எரிவாயு என அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் இலங்கையை விட மோசமாக உள்ளது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவின் பொருளாதார நிலை இலங்கையைவிட மோசமாக உள்ளது. எதிர்கட்சி ஆளும் மாநில அரசுகளுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை ஏவிவிடுவதற்கு பதிலாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து மத்திய அரசு விவாதிக்க வேண்டும். இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த ஏழு நாட்களுக்குப் பின்னர், எல்லாவற்றின் விலையையும் உயர்த்திவிட்டார்கள். இவர்களின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. மாநில அரசுகளுக்கு எதிராக சதி வேலைகளை செய்கின்றனர். அனைத்து மாநிலங்களையும் சமமாக பார்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுடன் பாரபட்சமாக இருக்க வேண்டாம் என்று கூறினார். இதற்கிடையில், இலங்கையைப் போன்ற நிலை இந்தியாவிலும் ஏற்படலாம் என்று சமாஜ்வாதி கட்சியின் எம்பி ராம் கோபால் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மத்திய பாஜக அரசின் பொருளாதார நிலையை குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: News