புலம் பெயர்ந்த தமிழராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
Posted on 04/03/2021
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது.
அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர்கள் மோகன்ராஜா, கரு. பழனியப்பன், மகிழ்திருமேனி, நடிகர் விவேக், நடிகை ரித்விகா, கனிகா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' டீஸரில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இலங்கையின் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு, தமிழகத்துக்கு புலம் பெயரும் தமிழராக நடித்திருக்கிறார் என்பதும், அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை என்றும் தெரிய வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் ஆர்வலராகவும், தமிழின உணர்வாளராகவும் அறியப்படுவதால் இப்படத்தின் டீசருக்கு எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரவேற்பு கிடைத்து வருகிறது.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' ஜூன் மாதம் 23ஆம் தேதியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.