சுபாஷ் சந்திரபோஸின் சாகசம்!
Posted on 26/04/2017
வியாபாரத்திற்காகவும், பணம் வரும் வழிகளை வியாபாரிகள் உட்பட பலர் புதிது புதிதாகக் கண்டுபிடிப்பார்கள். அவர்களது பேச்சு, செயல், தந்திரம் எதுவும் செயற்கையாக இருக்கும். ஆனால் அது பற்றி பிறரது கணிப்பைப் பற்றிக் கவலைப்படாமல் காரியத்திலேயே கண்ணாய் இருப்பார்கள். ஆனால், நம் நாட்டிற்கு விடுதலை வாங்கித்தர வேண்டும் என்ற வேட்கை ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, தன்னலம் பாராமல் பாடுபட்ட நமது தேசத்தலைவர்களில் மிக முக்கியமானவர் சுபாஷ் சந்திரபோஸ்.
அவரது புரட்சிகரமான செயல்களால் எண்ணற்ற இந்தியர்கள் அவர் வழி சென்றனர். இதனால் ஆங்கிலேயர் அரசாங்கம் கல்கத்தாவில் அவரை வீட்டுக் காவலில் வைத்தது. ஆனால் சுபாஷ் சந்திரபோஸ் தந்திரமாக, மாறுவேடம் அணிந்து வீட்டை விட்டுத் தப்பிவந்தார். வாகனம் ஏதும் இன்றி கால்நடையாகவே சென்று ஆப்கான் எல்லையை அடைந்தார். அங்கே அவருடன் பழகிய இத்தாலியர் பலர் இருந்தனர். அவர்கள் உதவியுடன், ‘ஓர்லேண்டோ மசோட்டா’ என்ற பெயரில் புது பாஸ்போர்ட்டைப் பெற்றார். பின் அந்த இத்தாலியர்கள் சுபாசுக்கு ஒரு காரை ஏற்பாடு செய்து தந்தார்கள். அந்தக் காரில் காபூலில் இருந்து, ரஷ்யாவின் எல்லையை அடைந்தார்.
அவரது மாறுவேடமும் மாற்றப்பட்ட பெயரும், இந்த வகையில் பயணம் செய்ய அவருக்கு மிகவும் வசதியாக இருந்தது. பின்னர் ரஷ்ய நாட்டு எல்லையில் இருந்து சாமர்கண்ட்டுக்குப் பயணித்தார். சாமர்கண்ட்டை அடைந்தவுடன் அங்கிருந்து ரயில் மூலமாக, மாஸ்கோவிற்குப் போனார்.
மாஸ்கோவில் உள்ள ஜெர்மன் நாட்டு தூதரகத்திற்குச் சென்றார். அவர்களும் சுபாசுக்கு உதவி செய்தார்கள். அதனால் பெர்லினை அடைந்தார். இந்தப்பயணம் அறுபது நாட்களாகத் தொடர்ந்தது. ஐ.என்.ஏ. என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் படை திரட்டிச்சென்று, இந்தியாவில் உள்ள ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என்ற முனைப்புதான் அவரை இவ்வளவு தூரம் சிரமப்பட வைத்தது. ஆனால் இந்த சிரமம் எல்லாவற்றையும் அவர் பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் அதனைக் கடவுள் தனக்குத் தந்த வாய்ப்பாகத்தான் கருதினார்.
அதனால்தான் கடவுளும் அவருக்கு, அவ்வளவு சிரமங்களைத் தாண்டிட உதவி செய்தார். அவர் ஐ.என்.ஏ. அமைப்பை உருவாக்கியதும் ஆயிரக்கணக்கில் அவர் படையில் விரும்பி சேர்ந்தனர். அதில் மதுரையைச் சோந்த பெண்கள் மட்டும் ஆராயிரம் பேர்.
மதுரைப் பெண்களின் தேச பக்தியையும் வீரத்தையும் கண்டு வியந்து போனார் சுபாஷ். அந்தப் படைவீரர்கள் இடையே அவர் ஆற்றிய உரைதான் மைல்கல்லாக இருந்தது. ‘நமது பாரத தேசத்தின் விடுதலைக்காக என்னுடன் அணியாகச் சேர்ந்துள்ள உங்களுக்கு, நான் ஊதியமாகக் கொடுக்க உன்னதமானது பல உள்ளது. அது, பசி, தாகம், உடல் சேதம், மிக உயர்ந்த பரிசாக மரணம்’. இவை தான் நான் உங்களுக்கு தரமுடிந்த ஊதியங்கள். ஆனால், இதன் பயனால் நமது எதிர்கால சந்ததியினர் அந்நியனுக்கு அடிமையாகாமல் சுதந்திரமாக வாழ முடியும். அப்போது, நாம் இழந்ததை எல்லாம் அவர்கள் சுதந்திரமாக அனுபவிப்பார்கள். நமது பயணம் தொடரட்டும். ‘டெல்லி சலோ’ என்று தீரத்துடன் தனது படையை வழிநடத்திச் சென்றார்.
Tags: News, Art and Culture