ஐ.நா. தீர்மானம் இந்தியாவால் புறக்கணிக்கப்பட்டது!
Posted on 24/03/2021
இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த உள்நாட்டு போர் 2009ம் ஆண்டு நிறைவடைந்தது. இப்போரின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. மேலும் தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது. பல ஆயிரம் பேர் மாயமாகினர். போர் விதிமுறைகளை மீறி இலங்கை அரசு அப்பட்டமான போர்க்குற்றம் புரிந்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இலங்கையில் நடைபெற்றது அப்பட்டமான இனப்படுகொலை என்றும் பலரும் குற்றம்சாட்டிவருகின்றனர்.
இலங்கை உள்நாட்டு போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறி அந்நாட்டின் மீதான சர்வதேச விசாரணை கோரும் தீர்மானம் ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் ஐ.நா சபையில் இங்கிலாந்து கொண்டு வந்தது. இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்தது. இதில் அர்ஜெண்டினா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட 22 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய 11 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா, பஹ்ரைன், ஜப்பான், நேபாளம் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளன.