மகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் ஏக்நாத் ஷிண்டே!
Posted on 30/06/2022
பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் மகாராஷ்டிராவில் சிவசேனை அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்பார் என்று பாஜக மூத்த தலைவரும் அந்த மாநில முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்தார்.
சிவசேனாவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உடனான கருத்து வேறுபாடு காரணமாக தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வந்தார். ஏக்நாத் ஷிண்டே அணி, அஸ்ஸாமில் ஒரு விடுதியில் தங்கியருந்தது. சிவசேனா எவ்வளவோ முயற்சி செய்தும் அதிருப்தி எம்எல்ஏக்கள் மாநிலத்துக்கு திரும்பவில்லை. அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உத்தவ் தாக்கரே தரப்பு செய்த முயற்சியும் உச்சநீதிமன்ற உத்தரவால் நிறைவேறாமல் போனது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை திட்டமிட்டப்படி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருந்தது. ஆனால், அதை சந்திக்காமலேயே உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
முன்னதாக, குஜராத்திலும், பின்னர் அஸ்ஸாமின் குவஹாத்தியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஏக்நாத் ஷிண்டேவும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் தங்கி இருந்தனர்.
அவருக்கு சிவ சேனா அமைச்சர்கள் 9 பேர் உள்பட அக்கட்சியின் எம்எல்ஏக்கள் சுமார் 40 பேர் ஆதரவு அளித்துள்ளனர். சுயேட்சைகள் 9 பேரும் அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
முன்னதாக, குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, தங்களுக்கு 50 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்டார். விரைவில் தாங்கள் மும்பைக்கு வர உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
அதன்படி இன்று மும்பை வந்த அவர், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸுடன் சென்று ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து தேவேந்திர பட்னவீஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக இன்று பதவியேற்பார். அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும். சிவசேனா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பதவியேற்றுக் கொள்வார்கள்.
இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிரான கட்சிகளுடன் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அமைத்தது. இதன்மூலம் மக்களின் தீர்ப்பை அக்கட்சி அவமதித்தது. 2019 தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வெற்றியும் பெற்றது. அதிக எண்ணிக்கையிலான இடங்களை பாஜக வென்றது. இருப்பினும், சித்தாந்ததுக்கு மாறாக சிவசேனா அக்கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு ஆட்சி புரிந்தது” என்றார்.
Tags: News