போலீசாருக்கு கவர்னர் வேண்டுகோள்
Posted on 08/01/2021
கர்நாடகத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கும் விழா கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. இதில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு, சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கி பேசும்போது கூறியதாவது:-
போலீசார் மக்களுக்கு எவ்வளவு அன்பு வழங்குகிறார்களோ அவ்வளவு நம்பிக்கையை மக்கள் திருப்பி கொடுப்பார்கள். நல்லவர்களை பாதுகாக்க வேண்டும். மோசமானவர்களின் மனநிலையை நாசப்படுத்துங்கள். நல்லவர்கள் வாழ அமைதியான சூழலை உருவாக்க வேண்டும். அதே நேரத்தில் ரவுடிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். தவறு செய்தவர்களுக்கு எதிராக சாட்சி கூறுபவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், எதிர்க்கட்சிகள் என யார் போராட்டம் நடத்தினாலும் போலீசார் வேண்டும். எங்காவது தீப்பிடித்தால் அவர்களை மீட்கவும், கட்டிடம் இடிந்து விழுந்தால் அங்கு இருப்பவர்களை காப்பாற்றவும் போலீசாரின் உதவி தேவைப்படுகிறது. கொலையாக இருந்தாலும் சரி, குண்டர்கள் சண்டையாக இருந்தாலும் சரி போலீசார் அவசியம் வேண்டும்.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசாரின் பணி நிரந்தரமாக தேவைப்படுகிறது. போலீஸ் துறையில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் கிடைத்துள்ளது. பதக்கம் வாங்கியது பெரிய வேலை அல்ல. இந்த பதக்கம் பெற்றால் உங்களின் பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது. அதனால் இன்னும் நம்பிக்கை, விசுவாசத்துடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு கவர்னர் வஜூபாய் வாலா கூறினார்.