சிறுநீரக பாதை தொற்று பாதிப்பிற்குரிய சிகிச்சை

சிறுநீரக பாதை தொற்று பாதிப்பிற்குரிய சிகிச்சை

இன்றைய தேதியில் எம்மில் பலருக்கும் சிறுநீர் வெளியேறும் போது பல்வேறு அசௌகரியங்களை சந்தித்திருக்கக்கூடும். இதற்காக உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றிருப்போம். சிலருக்கு ரத்த சர்க்கரையின் சமச்சீரற்ற அளவின் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என கருதி இதற்கு முறையான சிகிச்சை பெறுவதில்லை. இந்நிலையில் இப்பிரச்சனைக்கு உரிய தருணத்தில் சிகிச்சை பெறாவிட்டால், நாளடைவில் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு பாரிய அச்சுறுத்தல் உண்டாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இது தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள சிறுநீரக சிகிச்சை நிபுணர் டாக்டர். குரு பாலாஜி, M.S., அவர்களை சந்தித்தோம்.
 
யூரினரி ட்ராக்ட் இன்ஃபெக்ஷன் எனப்படும் சிறுநீரக பாதை தொற்று பாதிப்பு என்றால் என்ன.?
 
சிறுநீரக பாதை தொற்று என்பது பொதுவாக அப்பர் ட்ராக்ட் மற்றும் லோயர் டிராக்ட் என இரண்டு வகைப்படும்.  ரத்தத்தில் உள்ள கழிவுகளை சுத்தப்படுத்தி வடிகட்டி, சிறுநீராக உற்பத்தி செய்யும் இடம் தான் சிறுநீரகம். சிறுநீரகத்தில் உற்பத்தி செய்யப்படும் சிறுநீர், சிறுநீர் பையில் சேகரித்து வைக்கப்படும். குறிப்பிட்ட அளவு சேமிக்கப்பட்ட பின்னர் தன்னிச்சையான உணர்வின் மூலமாக இவை சிறுநீர் பாதை மூலமாக வெளியேறும். சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் பாதையை லோயர் டிராக் என்றும், சிறுநீர் பைக்கு மேலுள்ள பகுதியை அப்பர் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். இந்த இரண்டு பகுதியிலும் தொற்று பாதிப்பு ஏற்படும். பொதுவாக சிறுநீர் பாதை தொற்று பாதிப்பு என்பது ஆண்களை விட, பெண்களுக்கு அதிகம் ஏற்படும். அதிலும் குறிப்பாக வயதான பெண்களில் 60 சதவீதத்தினருக்கு மேல் இத்தகைய பாதிப்புக்குள்ளாகிறார்கள் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
 
இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
 
எம்முடைய உடலின் உட்பகுதியிலிருந்து உற்பத்தியாகும் சிறுநீரில் எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. சிறுநீர் கழிக்கும் போது சுற்றுப்புற சூழலில் உள்ள நச்சு மற்றும் மாசு ஆகியவற்றின் காரணமாக யுரித்ரா எனப்படும் சிறுநீர் பாதை வழியாக தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு இதன் வழியாக ஏற்படும் தொற்று முறையான கண்காணிப்பு மற்றும் சிகிச்சை பெறாததால், அவை மேல் நோக்கிச் சென்று சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகத்தை சென்றடைந்து அங்கு பாதிப்பை உண்டாக்குகிறது.
 
இரண்டு வகையான பாதிப்புகளுக்கும் உரிய அறிகுறிகள் என்ன?
 
சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல், அடி வயிறு வலி, காய்ச்சல், சிறுநீரின் நிறத்தில் மாற்றம், வெளியேறும் சிறுநீரில் கெட்ட வாசம் ஏற்படுவது, சில பெண்களுக்கு இடுப்பில் வலி ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு முதுகின் கீழ் பகுதியில் வலி, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் உண்டாகும். வேறு சிலருக்கு அவர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும் போதும், ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாடற்ற நிலையில் இருப்பவர்களுக்கும் அவர்களுடைய சிறுநீரகத்தில் தொற்று பாதிப்பு ஏற்படும். இதனை மருத்துவர்கள் Pyelonephritis என குறிப்பிடுவார்கள். இது சற்று தீவிரமான நிலை என்பதால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.
 
இத்தகைய பாதிப்பை வராமல் தற்காத்துக் கொள்ள மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை?
 
மருத்துவர் பரிந்துரைக்கும் அளவிற்கு நாளாந்தம்  தண்ணீரை அருந்த வேண்டும். தண்ணீரை அதிகமாக அருந்துவதன் மூலம் எம்முடைய உடலிலிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம் அத்தகைய பாக்டீரியா தொற்றுக்கள் வெளியேறிடும். அதிலும் குறிப்பாக கோடைகாலத்தில் தண்ணீரை அதிகமாக பருக வேண்டும். பெரும்பாலான மக்கள் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட அறைகளில் பணியாற்றுவதால், தண்ணீர் அருந்துவதை குறைத்துக் கொள்வர். ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரித்துக் கொள்வதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சிறுநீர் கழித்தவுடன் அப்பகுதியை சுகாதாரமாக பேண வேண்டும். அதிலும் பெண்கள் பயணத்தை மேற்கொள்ளும்போது சிறுநீரை முறையாக வெளியேற்றாமல், அதனை அதிக கால அவகாசம் வரை சேர்த்து வைத்துக்கொண்டு பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். திருமணமான தம்பதிகள் தாம்பத்திய உறவிற்கு முன்னரும் பின்னரும் சிறுநீரக பகுதிகளை முறையாக சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
என்னென்ன பரிசோதனைகளின் மூலம் இத்தகைய பாதிப்பை உறுதிப்படுத்திக் கொள்வார்?
 
சிறுநீர் பரிசோதனை, பாக்டீரியா தொற்றின் தன்மையை கண்டறிவதற்கான யூரின் கல்ச்சர் பரிசோதனை, ரத்த பரிசோதனை சிறுநீரகத்தில் தொற்று பாதிப்பு குறித்த துல்லியமாக அவதானிக்கும் ஸ்கேன் பரிசோதனை, சிறுநீர்ப்பையின் அமைப்பு மற்றும் செயல்பாடு குறித்த பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு பாதிப்பினை உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.
 
கர்ப்பிணி பெண்கள் சிறுநீர் பாதை தொற்றிற்கு அதிகமாக பாதிப்படைவார்களா..?
 
பெண்கள் கருவுற்றிருக்கும் தருணங்களில் குறிப்பாக முதல் மூன்று மாதங்கள் மற்றும் இறுதி மூன்று மாதங்களில் இயல்பான அளவைவிட கூடுதலாக சிறுநீர் வெளியேறும். கருவுற்றிருக்கும் தருணங்களில் அவர்களின் உடலில் குறிப்பாக கருப்பையில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவும் உடலில் சுரக்கும் ஹோர்மோன்களின் காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் கழிப்பர். இதன்போது அவர்களுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இத்தகைய பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டால் பிரத்யேக அறிகுறிகள் உண்டாகும். இதனை மருத்துவரிடம் தெரிவித்து முறையான ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். இதற்கு சிகிச்சை பெறாவிட்டால் குறைமாத பிரசவத்திற்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.  சிலருக்கு சிறுநீரக கல் பாதிப்பிற்கு ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு.
 
சிறுநீர் பாதை தொற்றிற்கான சிகிச்சைகள் குறித்து..?
 
சிறுநீர் பாதை தொற்றை தொடக்க நிலையில் கண்டறிந்தால் அதனை குறைந்த வீரியமுள்ள மற்றும் அதிக வீரியமுள்ள மருந்துகளால் குணப்படுத்த இயலும்.  கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை நோயாளிகள், இத்தகைய பாதிப்பிற்கு உரிய தருணத்தில் சிகிச்சை பெறாவிட்டால், அவர்களுக்கு பாதிப்பு தீவிரமடைந்து சத்திரசிகிச்சை மூலம் தீர்வினை வழங்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு சிகிச்சைப் பெற்ற பிறகும் சிறுநீர் பாதைத் தொற்றும் மீண்டும் ஏற்படக்கூடும். இதன் போது மருத்துவர் தெரிவிக்கும் வழிமுறைகளை உறுதியாக பின்பற்றினால், இதிலிருந்து குணமடையலாம். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 0091 98840 54755 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 
சந்திப்பு: அனுஷா

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top