மொபைல் இப்ப “ஸ்மார்ட் பர்ஸ்”
Posted on 08/12/2016
இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியோடு கூடிய வாழ்க்கையில் செய்யப்படுகின்ற வணிகலேவாதேவிகள் அனைத்தும் பணத்தை கையில் வைத்துக்கொண்டே செய்யப்பட வேண்டியதில்லை. எப்படி பண்டமாற்று காலப்போக்கில் பணமாக மாறியதோ, தற்போது பணம் டிஜிட்டலாகியுள்ளது. இந்நிலையில் தற்போது பணபரிவர்த்தனை செய்யும் ஒரு எலக்ட்ரானிக் பர்ஸாக மாறி வருகிறது மொபைல் போன்கள்.
இந்தியாவில் வாலட் நிறுவனங்கள் தற்போது அதிகமாகிக் கொண்டே வருகின்றன. அதில் குறிப்பாக பேடிஎம், மொபிக்விக், பேயூமணி, ஃபிரீசார்ஜ், சிட்ரஸ்பே போன்ற நிறுவனங்கள் இந்த சேவைகளை மிகச்சிறப்பாக வழங்கி வருகின்றன.
தனியார் நிறுவனங்களை தவிர்த்து வங்கிகளும் வாலட் சேவைகளை வழங்கி வருகின்றன. பாரத ஸ்டேட் வங்கி பட்டி (Buddy) என்ற வாலட்டை யும், ஹெச்டிஎப்சி வங்கி பேஸாப் (payzapp) என்ற வாலட்டையும் ஆக் ஸிஸ் வங்கி லைம் (lime) என்ற வாலட் டையும் ஐசிஐசிஐ வங்கி பாக்கெட்ஸ் (pockets) என்ற வாலட்டையும் செயல்படுத்தி வருகின்றன.
மொபைல் வாலட்டை நமக்கு பயன்தரும் வகையில் பயன்படுத்த அதனை முழுமையாகத் தெரிந்து கொள்வது அவசியம். வங்கிக் கணக்கில் பணத்தை போட்டு வைத்திருப்பதுபோல பணத்தை டிஜிட்டல் முறையில் மொபைல் வாலட்டில் வைத்திருக்க முடியும். இதற்கு ஸ்மார்ட் போனும், அதில் இணைய வசதி இருப்பதும் அவசியம்.
அடுத்ததாக மேல்கூறப்பட்ட ஏதேனும் மொபைல் வாலட் சேவை அளிக்கும் நிறுவனத்தின் செயலியை நமது செல்போனில் நிறுவி அதில் தேவையான பணத்தை வங்கிக் கணக்கு, கிரெடிட், டெபிட் கார்டுகளில் இருந்து டிரான்ஸ்பர் செய்து கொள்ள வேண்டும். ஒருவர் எத்தனை மொபைல் வாலட் நிறுவனத்திலும் பணத்தை போட்டு வைக்க முடியும். பிறகு தேவைப்படும்போது அதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த வாலட்டில் கொண்டிருக்கும் பணத்தை நாம் பலசரக்கு கடைகள், சினிமா டிக்கெட்ஸ் வாங்க, ஷாப்பிங் செய்ய என அனைத்து தேவைகளுக்கும் தங்குதடையின்றி பயன்படுத்தலாம்.
மிக சமீபத்தில் பேடிஎம் நிறுவனம் இணையம் இல்லா வாலட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 1800 1800 1234 என்கிற இலவச எண்ணிற்கு, பேடிஎம்மில் பதிவு செய்யப்பட்ட நம்முடைய மொபைலில் இருந்து அழைத்து, பணம் பெற்றுக்கொள்பவரின் மொபைல் எண் மற்றும் செலுத்தும் தொகையையும் டைப் செய்து பின் 4 இலக்க எண்ணை டைப் செய்தால் பணம் செலுத்தப்பட்டுவிடும்.
தற்போது இதுபோன்ற சலுகைகள் இளைஞர்களை பெரிதும் கவர்ந்த ஒன்றாக இருக்கிறது. எனவே, இனி வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியா டிஜிட்டலாவதை யாராலும் தடுக்க முடியாது.
Tags: News, Lifestyle, Academy