எம்எல்ஏ ஆன பிறகும் கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்!
Posted on 17/06/2022
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ மனோஜ் திவாரி விளையாடி வருகிறார். இவர் எம்எல்ஏவாகவும், கிரிக்கெட் வீரராகவும் ஒரே நேரத்தில் செயல்பட்டு வருகிறார்.
மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் பிறந்தவர் மனோஜ் திவாரி. இவர் இளம் வயது முதலே கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். கிரிக்கெட் சேர வேண்டும் என்ற கனவை துரத்திக் கொண்டிருந்த அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு யுவராஜ் சிங்குக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு மாற்றாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார்.
அந்தத் தெடாரில் 4வது மற்றும் 5வது ஒரு நாள் ஆட்டத்தில் அவர் விளையாடினார். அதே ஆண்டு அக்டோபரில் அவர் இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்காக தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக டெல்லி அணியில் இடம்பிடித்தார். பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளில் இடம்பிடித்து விளையாடினார்.
இந்த சூழ்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு அரசியலில் குதித்தார் மனோஜ் திவாரி. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முன்னிலையில் அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஷிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாகவும் ஆனார். தற்போது மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சராக அவர் பதவி வகித்து வருகிறார்.
எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் ஆன பிறகும், அவர் தனக்கு பிடித்த கிரிக்கெட்டை விட்டுவிடாமல், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பல கோப்புகளுக்கு கையொப்பம் இட வேண்டும். ஆனால், பகலில் கிரிக்கெட் விளையாடுவதால் முடியவில்லை. இருப்பினும், கையெழுத்திட வேண்டிய கோப்புகளை எனக்கு கூரியரில் அனுப்பிவிடுமாறு தெரிவித்து விடுவேன். அவ்வாறு எனக்கு கிடைக்கும் கோப்புகளை சரிபார்த்து கையொப்பம் இட்டு திருப்பி அனுப்புவேன். தொலைபேசி மூலம், எனது அலுவலகத்தை தொடர்பு கொண்டு அதன் நிலவரத்தை தெரிந்து கொள்வேன்” என்றார்.
மத்தியப் பிரதேசம்-பெங்கால் அணிகளுக்கு இடையே முதலாவது அரையிறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் மத்தியப் பிரதேச அணி 10 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை விளையாடிய பெங்கால் அணி கடுமையான தடுமாற்றத்தை எதிர்கொண்டது. எனினும், மனோஜ் திவாரியின் சதத்தால் அந்த அணி நல்ல ஸ்கோரை எட்டியது. இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை பெங்கால் அணி விளையாடி வருகிறது.
ஒரே நேரத்தில் எம்எல்ஏவாகவும், கிரிக்கெட் வீரராகவும் ஜொலித்துவரும் மனோஜ் திவாரியை மேற்கு வங்கத்தில் அனைவரும் வியந்து பார்க்கின்றனர்.
Tags: News