இந்தியாவைச் சேர்ந்த குப்தா சகோதரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது
Posted on 07/06/2022
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) குப்தா குடும்பத்தைச் சேர்ந்த அதுல் குப்தா மற்றும் ராஜேஷ் குப்தா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) குப்தா குடும்பத்தைச் சேர்ந்த அதுல் குப்தா மற்றும் ராஜேஷ் குப்தா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னாப்பிரிக்க அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவின் நண்பர்களான குப்தா சகோதரர்கள், தென்னாப்பிரிக்காவில் சட்ட விரோதமாக பொருளாதார ஆதாயத்தைப் பெற்றதாகவும், அதற்கு ஜுமாவுடனான தங்கள் நட்புறவை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதுல் மற்றும் ராஜேஷ் குப்தா கைது செய்யப்பட்டதையடுத்து, இவர்களை நாடு கடத்துவது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தென்னாப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குப்தா சகோதரர்கள் ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் விசாரணையை நீதித்துறை ஆணையம் தொடங்கிய பின்னர் 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறினர். பெரிய அரசு ஒப்பந்தங்களை வெல்வதற்கும், சக்திவாய்ந்த அரசாங்க நியமனங்களில் செல்வாக்கு செலுத்துவதற்கும் நிதி லஞ்சம் கொடுத்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஜுமாவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் குறைந்தது 500 பில்லியன் ரேண்ட் ($32 பில்லியன்) திருடப்பட்டதாக அரசாங்கம் கூறியுள்ளது. இருப்பினும், ஜேக்கப் ஜூமா மற்றும் குப்தா சகோதரர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
முன்னதாக, அதிபர் சிரில் ரமபோசாவின் நிர்வாகம் 2018 ம் ஆண்டு குப்தா குடும்ப உறுப்பினர்களை நாடு கடத்துமாறு ஐக்கிய அரபு எமிரேட் அதிகாரிகளை கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் அதற்கு அடுத்த ஆண்டு விசா கட்டுப்பாடுகளிலிருந்து சொத்து முடக்கம் வரை பல கட்டுப்பாடுகளை விதித்தது. கடந்த ஆண்டு பிரிட்டன் இதைப் பின்பற்றியது. இன்டர்போல் எனப்படும் சர்வ தேச போலீஸ் இரண்டு சகோதரர்களையும் பிப்ரவரியில் அதன் தீவிரமாக தேடப்படும் நபர் பட்டியலில் சேர்த்தது.
அதுல் மற்றும் ராஜேஷ் குப்தா கைது குறித்து தென்னாப்பிரிக்க அதிபர் ரமபோசா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அவரது செய்தித் தொடர்பாளர் வின்சென்ட் மக்வென்யா விளக்கம் அளித்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஊழலுக்கு எதிராக போராட நெகிழ்வுத்தன்மை தேவை என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம் என்றார். அரசாங்கம் தனது வேலையைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
Tags: News