தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையை அடுத்து சொந்த ஊருக்கு செல்லும் சென்னை சிட்டிசன்கள்
Posted on 03/09/2016
சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால், பிற மாவட்டத்தில் இருந்து சென்னையில் வந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் சென்னையில் நேற்று இரவு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
சனி, ஞாயிறு என வார விடுமுறையை தொடர்ந்து திங்கள் கிழமை வினாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறையும் சேர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால் சொந்த ஊரை விட்டு சென்னையில் தங்கி வேலை பார்ப்பவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி.
இந்த தொடர் விடுமுறையை பயன்படுத்திக் கொண்டு அவரவர் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தாருடன் 3 நாளை நிம்மதியாக கழித்து விட்டு வருவதற்காக வெள்ளிக் கிழமை இரவு வெளியூருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் கோயம்பேடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் செல்வதற்கே 3 மணி நேரம் ஆனதாக பலர் தெரிவித்தனர். பெசன்ட் நகரிலிருந்து கோயம்பேடு செல்லவே 2 மணி நேரம் ஆகியுள்ளது.
Tags: News