ஹாலிவுட் கிராபிக்ஸ்-ஐ மிஞ்சிய பெங்களூரு ஏரி!
Posted on 16/08/2017
பெலந்தூர் ஏரி சுத்தப்படுத்துவதற்காக நடைபெற்ற பணிகள் நேற்று பெய்த மழை காரணமாக வீணாகிப் போயுள்ளன, இரண்டு அடுக்கு மாடி உயரத்திற்கு எழும்பிய நுரையை அகற்றும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
பெங்களூரின் பிரசித்தி பெற்ற பெலந்தூர் ஏரி சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பு கொண்டது. இந்த நீர் நிலையில் பிளாஸ்டிக், குப்பைகளால் மாசு ஏற்பட்டதால் அதன் நீர் வற்றி கடந்த மூன்று மாதங்களாக காய்ந்த புற்களுடன் காட்சியளித்தது. அருகில் இருந்த ஆலைகளின் கழிவுகளால் இந்த ஏரி மாசுபட்டதையடுத்து பசுமைத் தீர்ப்பாய நீதிமன்றம் அனைத்து தொழிற்சாலைகளையும் மூட உத்தரவிட்டது. இதையடுத்து ஏரியை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. கடந்த திங்கட்கிழமை இந்தப் பணிகள் நடைபெற்ற ஓரளவு சுத்தம் செய்யப்பட்ட போதும், இரவு பெய்த மழை காரணமாக ஏரியில் இருந்த கழிவுகள் நுரைக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால் இந்த முறை கிளம்பிய நுரையானது இரண்டு அடுக்கு மாடிகட்டிட உயரத்திற்கு வந்ததால் அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இந்த ஏரியை சுத்தப்படுத்தும் பொறுப்பில் உள்ள பெங்களூரு வளர்ச்சி மேம்பாட்டு கழகம் ஏரியில் கிளம்பும் நுரையை வடிகட்டி தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்த முறை ஏரி நுரைத்து பொங்குவதற்கு வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரில் உள்ள டிடர்ஜென்ட்டுகளக் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏரிக்கு அருகில் இருக்கும் குடியிருப்பு வாசிகள் கழிவு நீரை நேரடியாக ஏரியில் கலக்காமல் தனியான கழிவுநீர் தொட்டிகளை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். நீண்ட நாட்களாகவே குடியிருப்பு வாசிகளுக்கு இந்த கோரிக்கையை நிபுணர்கள் குழு விடுத்து வருகிறது.
அவர்கள் அதனை கவனத்தில் கொள்வதில்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே திங்கட்கிழமை பெய்த கனமழையில் ஏரி நுரையை கக்கியுள்ளதாகவும் கூறுகின்றனர். ஏரி இதுவரை இந்த அளவிற்கு நுரைத்து பார்த்ததில்லை, என்றும் கிராபிக்ஸ் காட்சிகளில் வருவது போல 2 அடுக்கு மாடி கட்டிடம் உயரத்திற்கு நுரை பொங்கியுள்ளதாக இதனை நேரில் பார்த்தவர்கள் விளக்கியுள்ளனர். இந்நிலையில் நுரையை அகற்றி ஏரியை அசுத்தப்படுத்தும் கழிவுகள் நுழைவதை கட்டுப்படுத்தவும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் கூறியுள்ளது.
Tags: News, Lifestyle