பள்ளிக்கு வெளியே மாணவிகள் ஹிஜாப் அணியலாம்!
Posted on 16/03/2022
ஹிஜாப் வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பை பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றார். மேலும், பள்ளிக்கு வெளியே மாணவிகள் ஹிஜாப் அணியலாம் என்று தெரிவித்தார்.
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள அரசு பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர நிர்வாகம் தடை விதித்தது. இருப்பினும், முஸ்லிம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து வந்தனர். ஆனால் அவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனையடுத்து அந்த மாணவிகளுக்கு ஆதரவாக பல முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களையும் நிர்வாகம் கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து இந்த விவகாரம் கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 5ம் தேதியன்று பள்ளிகளில் சீருடைகள் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் ஹிஜாப் அணிவதற்கு விதிவிலக்கு அளிக்க முடியாது என்று கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித்,நீதிபதி ஜே,எம், காஜி அடங்கிய அமர்வு, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அடிப்படை அவசியம் கிடையாது என்றும் 3 நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. கல்வி நிலையங்களில் சீருடை பரிந்துரைக்கப்படுவது அடிப்படை உரிமைகள் மீதான நியாயமான கட்டுப்பாடு ஆகும், அதை மாணவர்கள் எதிர்க்க முடியாது. அதேசமயம் ஹிஜாப் தடைக்கு எதிரான சரியான முகாந்திரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்று கூறி ஹிஜாப் தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பா.ஜ.க. எம்.பி.சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், பள்ளிகளில் சீரூடைடையை பின்பற்ற வேண்டும். பள்ளிக்கு வெளியே மாணவிகள் ஹிஜாப் அணியலாம். மேலும் நியாயமான கட்டுப்பாடுகளை கட்டுப்படுத்தாத எந்த அடிப்படை உரிமையும் அரசியலமைப்பில் இல்லை. அவர்களின் அடிப்படை உரிமைகள் நியாயமற்ற முறையில் மீறப்பட்டால் அதை அவர்களால் நிரூபிக்க முடியாது என்று தெரிவித்தார்.
Tags: News