87-வது வயதில் 10-வது பாஸ் செய்த முன்னாள் முதலமைச்சர்!
Posted on 11/05/2022
நான்கு முறை ஹரியானா முதலமைச்சராக இருந்த ஓம் பிரகாஷ் சௌதாலா தனது 87ஆவது வயதில் 10, 12ஆம் வகுப்பு பாஸ் செய்துள்ளார்.
வயது வெறும் எண்தான் என்ற வாசகத்தை நிரூபித்துக் காட்டியுள்ளார் ஹரியானாவின் முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலா. இவருக்கு வயது தற்போது 87. இவர் கடந்தாண்டு ஹரியானா மாநில 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்.முதலில் 12ஆம் வகுப்பு தேர்வை மட்டும் எழுதிய சௌதாலாவின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டன. இவர் 10ஆம் வகுப்பில் ஆங்கில தேர்வு மட்டும் பாஸ் செய்யாத காரணத்தினால் 12ஆம் வகுப்பு முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து 10ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வையும் தனியாக எழுதி, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளை பாஸ் செய்துள்ளார் இந்த முன்னாள் முதலமைச்சர்.இவர் இன்று ஹரியானா தலைநகர் சண்டிகரில் உள்ள தேர்வு மையத்திற்கு சென்று தனது பொது தேர்வுக்கான மார்க் ஷீட்டை பெற்றுக்கொண்டார். 10ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 100க்கு 88 மதிப்பெண் எடுத்துள்ளார் சௌதாலா. தேர்ச்சி பெற்ற முன்னாள் முதலமைச்சருக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் அபிஷேக் பச்சன், நிர்மத் கவுர் ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஓம் பிரகாஷ் சௌதாலா ஹரியானாவின் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் மாநிலத்தின் முதலமைச்சராக நான்கு முறை இருந்துள்ளார்.முன்னாள் துணைப் பிரதமர் தேவி லாலின் மகனான ஓம் பிரகாஷ் சௌதாலா ஊழல் புகாரில் சிக்கி சிறை தண்டனை பெற்றவராவார்.இதையும் படிங்க: இந்தியாவில் 82% மனைவிகள் கட்டாய உறவுக்கு 'நோ' சொல்ல இயலும் - ஆய்வில் தகவல்இவரின் பேரனான துஷ்யந்த் சௌதாலா தற்போது ஹரியானாவின் துணை முதலமைச்சராக உள்ளார்.
Tags: News