பார்த்திபனுக்கு தோள் கொடுக்கும் இசைப்புயல்
Posted on 12/04/2021
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இயக்கத்தில் தயாராகி வரும் 'இரவின் நிழல்' என்ற படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது.
இசையமைப்பாளர் என்ற தளத்திலிருந்து கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருப்பவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். ஆஸ்கர் நாயகனான இவர் தற்போது புதுமை இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் தயாராகி வரும் 'இரவின் நிழல்' என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இது தொடர்பாக தன்னுடைய டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது..
'பார்த்திபனின் 'இரவின் நிழல்: படத்தில் பணியாற்றி வருகிறேன். அந்தப் படத்திற்காக மூன்று பாடல்கள் தயாராகிவிட்டது. விரைவில் மற்றொரு பாடலும் தயாராகிவிடும். மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என தெரிவித்திருக்கிறார்.
பார்த்திபன் இயக்கத்தில் வெளியான 'ஒத்த செருப்பு' என்ற படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அவர் அடுத்தகட்ட முயற்சியாக இயக்கிவரும் 'இரவின் நிழல்' என்ற படத்தை ஒரே ஷாட்டில் எடுக்க திட்டமிட்டு, அதற்கான ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்.
'ஒத்த செருப்பு' ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படவில்லையே..! என்ற வருத்தம் பார்த்திபனுக்கு இருப்பதாலும், ஏற்கனவே ஆஸ்கர் விருது வாங்கிய நாயகன் ஏ ஆர் ரஹ்மானுக்கு அதுதொடர்பான நுட்பம் தெரியும் என்பதாலும் அவரை இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பார்த்திபன் வழங்கியிருப்பதாக இணையவாசிகள் தெரிவிக்கிறார்கள். இந்த முறை பார்த்திபன் - ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் உருவாகும் 'இரவின் நிழல்' ஆஸ்கர் விருதுக்கு எட்டும் என உறுதியுடன் எதிர்பார்க்கலாம்.