மார்ச் 31ம் தேதி வெளியாகிறது டோரா
Posted on 06/03/2017
நயன்தாரா நடிப்பில் தயாராகிவரும் 'டோரா' மார்ச் 31-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
'மாயா' படத்தைத் தொடர்ந்து சற்குணம் தயாரிப்பில் உருவான மற்றொரு பேய் படத்தில் நடிக்கத் தொடங்கினார் நயன்தாரா. புதுமுக இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார் ஜபக்.
தினேஷ் ஒளிப்பதிவு செய்து வந்த இப்படத்துக்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ளார்கள். தம்பி ராமையா மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
நயன்தாராவுடன் கார் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்று இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீஸருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
'டோரா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுற்று இறுதிகட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்திருந்தது.
மார்ச் 31-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஆரோ சினிமாஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags: News, Hero, Star