கோடை காலத்தில் அதிகரிக்கும் பாக்டீரியா தொற்று
Posted on 18/04/2022
உலக அளவில் நிகழும் தட்ப வெப்ப நிலை மாறுபாட்டால் தற்போதைய கோடைகாலத்தில் வெப்பநிலை என்பது இயல்பான அளவை விட கூடுதலாக இருக்கும் என வானவியல் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் குளிர் காலத்தை விட கோடைகாலத்தில் சல்மோனெல்லோசிஸ் என்ற பாக்டீரியா தொற்று பாதிப்பு அதிகளவில் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
எம்மில் பெரும்பாலானோர் வெயிலில் உலாவி விட்டு இல்லத்திற்குள் திரும்பியவுடன் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து, குளிர்பானங்களை வேகமாகவும், அகாலமான தருணங்களிலும் பருகுவர். மேலும் வேறு சில காரணங்களாலும் எம்மில் பலருக்கு சல்மோனெல்லோசிஸ் என்ற பாக்டீரியா தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட உடன் சிலருக்கு காய்ச்சல் ஏற்படக்கூடும். எட்டு மணித்தியாலத்திலிருந்து நான்கு நாட்கள் வரை இந்த தொற்று பாதிப்பு நீடிக்கும். சிலருக்கு இதன் காரணமாக பேதி ஏற்படும்.
வாந்தி, குமட்டல், அடி வயிற்று வலி, காய்ச்சல், தலைவலி, ரத்தத்துடன் மலம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இதிலிருந்து 4 நாட்களுக்குள் மீண்டு விடுவார்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பாதிப்பு அதிகரித்து நீர்சத்து குறைபாடு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையை எதிர் கொள்ளக் கூடும். இதனால் இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை புறக்கணித்தால் கண்களில் கண்ணீர் உற்பத்தி பாதிக்கப்பட்டு அசௌகரியம் உண்டாகும். சிறுநீர் வெளியேற்றத்தின் போது வலி உண்டாகும். மேலும் அனைத்து மூட்டுகளிலும் வலி ஏற்படும். இவர்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும் சிகிச்சையும் பெற்று குணமடையலாம்.
உலக அளவில் மில்லியன் கணக்கிலான மக்கள் இத்தகைய பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் கோடைகாலத்தில் ஏற்படும் இத்தகைய தொற்று குறித்த முழுமையான விழிப்புணர்வு பெற்றிருப்பதால் விரைவில் சிகிச்சை பெற்று குணமடைகிறார்கள்.
குளிர் காலத்தை விட கோடை காலத்தில் இருக்கும் அதிக வெப்பநிலையே இத்தகைய பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதால், உணவு முறையிலும், வாழ்க்கை நடைமுறையிலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு முறையை பின்பற்ற வேண்டும்.
டாக்டர். அனந்த கிருஷ்ணன்
தொகுப்பு: அனுஷா
Tags: News