தமிழர்களின் வீரம், இன்றோ நேற்றோ பேசப்பட்டது அல்ல!
Posted on 22/08/2017
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே நம்முடைய வீரம் மற்றும் போர் திறங்களைப் பற்றி வரலாறு இன்றும் ஏடுகளில் சுமக்கின்றது. இதில் மிகப்பெரிய சிறப்பம்சமாக பெண்களின் வீரம் அதிகம் பேசப்பட்டது. வீரமிக்க பெண்களாக ஜான்சி ராணி, ராணி மங்கம்மாள், வேலு நாச்சியார் போன்றவர்கள் பெண்மை வீரத்தின் எடுத்துக்காட்டு.
குதிரையேற்றம், வாள் சண்டை, சிலம்பம், களரி என அனைத்து போர்கலைகளையும் கற்று, பல போர்களில் வெற்றி பெற்றனர். ஆனால் இன்று அவைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வருகிறது. தற்காப்பு கலைகளில் தலை சிறந்து விளங்கிய நம் பாரம்பரிய கலைகள் இன்றைய வருங்கால சந்ததிகளுக்கு கொண்டு செல்ல மறக்கிறோம்.’ என தொடங்கினார் தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ளும் செல்வி. சங்கீதா.
இன்றைய காலத்தில் பெண்கள் தற்காப்பு கலை கற்றுக்கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது. ஆனால், நான் இவையெல்லாம் முன்னிருத்தி இக்கலைக்குள் வரவில்லை. அடிப்படையில் நான் ஒரு பரதநாட்டிய மங்கை. சிறு வயதிலிருந்தே பரதநாட்டியம் கற்றுக் கொள்கின்றோம். என்னுடைய ஆறாம் வகுப்பில் நான் என்னுடைய பரதநாட்டிய வகுப்பு முடிந்து வந்தபோது, மாணவர்கள் கம்புகளை வைத்து சிலம்பம் கற்றுக்கொண்டிருப்பதை கண்டேன். அதைப் பார்ப்பதற்கு ’ஹீரோயிக்’-காக இருந்தது என்று சொல்லலாம். எனவே, இக்கலையை நானும் கற்றுக்கொள்ள வேண்டுமென ஒரு விளையாட்டு தனமாக எண்ணத்தில்தான் தொடங்கினேன். பெண் பிள்ளை என்பதால் வீட்டில் தொடக்கத்தில் ஒரு சில தயக்கங்கள் இருந்தது. ஆயினும், என்னுடைய தாயார் எனக்கு முழு ஆதரவளித்து ஊக்குவித்தார். இன்று என்னுடைய முழு குடும்பமும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.
விளையாட்டு தனமாக துவங்கிய நான் சிறிது நாட்கள் விளையாட்டாகவே இருந்தேன். அப்போது நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் இரண்டு முறை தொடர்ந்து தோல்வியையே சந்தித்தேன். அத்தோல்வியே என் திருப்பு முனையாக அமைந்தது. அடுத்த முறை தோல்வியடையக் கூடாது என்கிற ஒரு குறிக்கோளாடு அடுத்த போட்டிக்கு என்னை முழுவதுமாக தயார்படுத்திக்கொண்டு மாவட்டம் மற்றும் மாநிலப் போட்டியிலும் வெற்றிப்பெற்றேன். பலரும் பணிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது சிலம்பத்தில் என்னுடைய படிப்பு பாதிக்கும் என்றனர், ஆனால் நான் பணிரெண்டாம் தேர்வில் 98 சதவீதம் பெற்றேன்.’ என்றார்.
இன்று சிலம்பம் மற்றும் இதர தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலைகள் பற்றி சிலம்பம் ஆசான் ’கலைவளர்மணி’ டாக்டர். சாகுல் ஹமீது அவர்களிடம் கேட்டோம். முழுக்க முழுக்க நம் பாரம்பரியம் சார்ந்த தற்காப்பு கலைகளைப் பயிற்றுவிக்கும் ஒரு களமாகவே இந்த சிம்மாசன் பயிற்சியகம் இருக்கிறது. இன்று நம்முடைய இந்தியாவிலேயே பல பாரம்பரிய கலைகள் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு உலகளவில் பேசப்படுகிறது. ஆனால், ஏன் நம்முடைய சிலம்பம் தமிழகம் தாண்டி செல்லவில்லை என்கிற கேள்வி எனக்குள் இருந்தது. அப்போது இது குறித்தான ஆராய்ச்சியை மேற்கொண்ட நேரத்தில்தான் அமெரிக்காவை சார்ந்த எட்வெர்ட் என்பவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.
அவருடன் பேசுகையில் மேற்கத்திய நாடுகளை சார்ந்தவர்கள் நம் பண்பாடுகளையுமே விரும்புகின்றனர். எனவே, நாங்கள் இருவரும் இணைந்து பல விஷயங்களை பற்றி பேசியும், ஆய்வுகளையும் மேற்கொண்டோம். அப்போது இந்த சிலம்பம் கலையை கொண்டு செல்ல மொழி என்பது ஒரு பிரச்சனையாக இருப்பதை நாங்கள் உணர்தோம். அதன் பின் அவற்றை எல்லாம் தொகுத்து எட்வெர்ட் புத்தகங்காக வெளியிட்டார். அதன்பின் எங்களின் தொகுப்புகளை ஒரு வீடியோ பதிவாகவும் தயார் செய்தோம்.
இன்று யுவன் யுவதி இருவருமே இக்கலையை கற்றுக்கொள்வதில் அதிகம் ஆர்வமும் ஈடுபாடும் காட்டுகின்றனர். தற்போது கோரிப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் எங்களின் பயிற்சியகத்தில் சிலம்பம், களரி, வாள் சண்டை, குஸ்தி, யோகா போன்றவற்றை கற்பிக்கிறோம்’ என கூறினார்.
தொடர்புக்கு: 9443321925, 9944848440
Tags: News, Madurai News, Art and Culture