மஸ்கட்டில் மாபெரும் தமிழர் திருவிழா 2018
Posted on 31/01/2018
மஸ்கட் தமிழ்க்குடும்பங்கள் இணைந்து நடத்திய ‘தமிழர் திருவிழா-2018’ வண்ணமயமாக தமிழர்களின் பாரம்பரியத்துடன் கூடிய பொங்கல் வைபவத்துடனும், முளைப்பாரி, சமத்துவப் பொங்கல், கரகம், காவடி, காளையாட்டம், கும்மியாட்டம், சிலம்பம், மெல்லிசை நிகழ்ச்சிகளுடனும் காண்போர் கண்களுக்கும், காதுகளுக்கும் இனிய விருந்தாக அமைந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய, விழாவில் திரைப்பட நடிகர் திரு. பயில்வான் ரங்கநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். தஞ்சை ‘சிவசக்தி கலைக்குழுவினர்’, கலைமாமணி திரு. முத்துக்குமார் தலைமையில் பங்கேற்று நாதஸ்வரம், கரகம், காவடி, காளையாட்டம், கும்மியாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியது தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் மற்றும் கலாச்சாரத்தினை தமிழர்கள் கண்முன் கொண்டுவந்து நிறுத்தின.
மஸ்கட் ‘ஜனனி ரிதம்ஸ்’ இசைக்குழுவினரின் இசை நிகழ்சியும், மஸ்கட் மங்கையரின் நடன நிகழ்ச்சிகளும் பங்கேற்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. முன்னதாக பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து நாதஸ்வர இசையுடன் பெண்களின் முளைப்பாரி ஊர்வலமும் கலந்துகொண்டவர்களைப் பரவசப்படுத்தியது. விழாவினை டி.வி புகழ் நெல்லை செல்வி அவர்கள் விழாவினைத் தொகுத்து வழங்கினார்.
விழாவில் கவிஞர். பஷீர் அவர்கள் துவக்கவுரை ஆற்றினார். திருமதி. ஹேமாசுந்தர் வரவேற்புரையாற்றினார். விழாவின் பொறுப்பாளர் திரு. சுந்தர்ராஜன் அனைவருக்கும் நன்றியுரையாற்றினர். இயல், இசை, நாடகத் துறைகளில் தங்கள் பங்களிப்புக்காக மஸ்கட் தமிழர்கள் முறையே திரு.K.A. பிள்ளை, திரு. அப்ஸர், திரு. தஸ்லீம் அவர்களுக்கும், மற்றும் கவிஞர்.பஷீர், டாக்டர்.அனுபாமா அவர்களுக்கும் சிறப்பு விருந்தினர் நெல்லைத் தொழிலதிபர் திரு. இசக்கி அவர்களும், திரு.சுந்தர் அவர்களும் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
மஸ்கட்டில் இது ஒரு மாபெரும் பொங்கல் வெற்றி நிகழ்ச்சியாக அமைந்தது என விழாவில் பங்கேற்ற அனைவரும் பாராட்டினர்.
Tags: News, Lifestyle, Art and Culture