டெரக்கோட்டா வகைகள்! தீபாவளிக்கு அசத்தலான நகைகள்!
Posted on 19/10/2016
சுயதொழில் செய்வது என்பது சுயமரியாதையை அளித்திடும் என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைய சமுதாயத்தில் ஒருவரின்கீழ் வேலை பார்ப்பதைவிட தாமாக தொழில் தொடக்குவதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர், குறிப்பாக பெண்கள்.
இன்று பல பெண்கள் வீட்டில் கிடைக்கும் நேரங்களில் ஏதோ ஒரு கைத்தொழில் ஒன்றை செய்து ஜொலிக்கிறார்கள். இது அவர்களின் வாழக்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் அதிகரிக்கிறது. கைத்தொழிலில் பல இருந்தாலும் டெரக்கோட்டா என்பதற்கு தனி மவுசு இருந்து வருகிறது. பெண்களும் இதனை கற்றுக் கொள்ள அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மதுரை கே.கே.நகரை சேர்ந்த திருமதி. ஹேமலதா, எம்.டெக் படிப்பை முடித்து விட்டு, முழுநேரம் டெரக்கோட்டா நகைகள் செய்வதிலேயே ஈடுபட்டிருக்கிறார். டெரக்கோட்டா நகைகள் செய்வதில் அவர்களின் தனித்துவத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள அவர்களை சந்தித்து உரையாடினோம்.
‘எங்களுடையது கலைக் குடும்பம். என்னுடைய தாத்தா மற்றும் என்னுடைய தந்தை தஞ்சாவூர் ஓவியம் வரைவதில் சிறப்பு பெற்றவர்கள். என்னுடைய தந்தை சென்னையில் முறையாக சென்னையில் கலை தொடர்பான படிப்பினைப் பயின்றார். பல ஓவியங்களின் மத்தியில் வளர்ந்த எனக்கு கலையின் மீது அதிகப்படியான விருப்பம் ஏற்பட்டது. இருப்பினும் என்னுடைய தந்தையின் அறிவுறுத்தலின்படி எம்.டெக் படிப்பினை முடித்து, பின் ஒரு தனியார் பள்ளியில் துணை பேராசிரியராக பணியாற்றினேன்.
ஆனால் எனக்கு ஆர்வம் அனைத்துமே கலையின் மீதே இருந்துவந்தது. அச்சமயத்தில் நான் இணையதளத்தில் டெரக்கோட்டா நகைகள் பற்றி தேடிக்கொண்டிருந்த பொழுது அதன் விலை மிகவும் அதிகமாக இருப்பதை உணர்ந்தேன். எனவே, ஒரு முயற்சியாக செய்து பார்போமே என இணையதளத்தில் டெரக்கோட்டா நகைகள் தயாரிப்பு பற்றிய தகவல்களை சேகரித்துக்கொண்டு களத்தில் இறங்கினேன். தோடு, ஜிமிக்கி, நெக்லெக்ஸ் என சிலவற்றை வடிவமைத்தேன். அதற்கு எனக்கு மிகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, இதை நாம் ஏன் ஒரு தொழிலாக எடுத்து செய்யக்கூடாது என்கிற எண்ணத்தோடு ’மேக்னாஸ் க்ளேவேர்’ என்கிற பெயரில் நகைகளை செய்யத்தொடங்கினேன்.
இங்கு நான் எந்த ஒரு டிசைனையும் முன்கூட்டியே செய்து அதை விற்பனை செய்வதில்லை. வாடிக்கையாளர்கள் எனக்கு கொடுக்கும் ஆடைகளின் புகைப்படத்தைக் கொண்டு, அந்த ஆடைக்கு எந்த மாதிரியான டிசைன், எந்த வண்ணம் சரியாக இருக்கும் என்பதை அறிந்தப் பின்னரே வடிவமைப்பதுண்டு. இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் ஒன்றாகிவிட்டது.
மேலும், இதுபோன்ற நகைகளால் அலர்ஜி ஏற்படுமோ என்கிற எண்ணம் மக்களிடையில் இருக்கிறது. அது முற்றிலும் தவறானது. இந்த நகைகள் முழுக்க முழுக்க களிமண்ணைக் கொண்டு செய்யப்படுவதால், இது குளிர்ச்சியை ஏற்படுத்தும். அத்தோடு இது கீழே விழுந்தாலும் உடையாது, தண்ணீர் பட்டாலும் கரையாது. ‘வெட் டிஸ்யூ’ கொண்டு துடைத்தால் மட்டுமே போதுமானது.
என்னுடைய பேஸ்புக் பக்கம் பார்த்தும் பல வாடிக்கையாளர்களின் பரிந்துரையின் பேரிலும் தற்போது அமெரிக்கா, சிங்கப்பூர், லண்டன் போன்ற நாடுகளுக்கும் அனுப்பிவருகிறேன்.
இன்று பலர், ஆர்வத்துடன் இந்த டெரக்கோட்டா நகைகள் தயாரிக்க விருப்பம் தெரிவிக்கின்றனர். தற்போது அவர்களுக்கான வகுப்புகளையும் எடுத்து வருகிறேன்’ என கூறினார்.
விபரங்களுக்கு: 8056635878
Tags: News, Beauty, Madurai News, Lifestyle, Art and Culture