ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமையைப் பேசும் 'குழலி'
Posted on 16/02/2021
முக்குழி பிலிம்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் 'குழலி' என்ற திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமை பேசப்பட்டிருப்பதாக அப்படத்தின் முன்னோட்டத்தின் மூலம் தெரிய வருகிறது என திரை விமர்சகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் செரா. கலையரசன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் 'குழலி'. இப்படத்தில் 'காக்கா முட்டை' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த விக்னேஷ், வளரிளம் பருவ நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக 'பைசா' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஆரா நடித்திருக்கிறார். ஷாமீர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி. எம். உதயகுமார் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் ஓடியோ வெளியீடு அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
இதில் 'கல்யாணம் கல்யாணம்..' எனத் தொடங்கும் பாடலை கிராமியக் கலைஞர்கள் பாடினர். இப்படத்தின் முன்னோட்டமும் திரையிடப்பட்டது. அதில் 'ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு கிடந்த மக்கள் எழுந்து நிற்பதற்காக பேனா பிடிக்கும் பொழுது உங்களுக்கு என் இவ்வளவு கோபம் வருகிறது..' என்று கதையின் நாயகி ஆவேசத்துடன் பேசும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. இதன் காரணமாக இந்தப் படம் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமையை உரத்துப் பேசுகிறது என்று எண்ணத் தோன்றுகின்றது.
படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில் சமூக அக்கறையுடன் கூடிய படைப்புகளை மட்டுமே வழங்குவதற்கு நான் இத்துறையில் அறிமுகமாகி இருக்கிறேன். எம்முடைய கலைப் பயணத்தில் பெண்களை ஒருபோதும் தவறாக சித்தரிக்கும் எண்ணம் இல்லை.' என்றார்.
இந்தக் 'குழலி' விளிம்பு நிலை மக்கள் கல்வி பெறுவதில் உள்ள தடைகளை விரிவாக பேசும் படம் என்று தெரிவதால் இதற்கு தற்போது எதிர்ப்பும், எதிர்பார்ப்பும் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை பிரபல வினியோக நிறுவனமான டிரைடன்ட் ஆர்ட்ஸ் வெளியிடுகிறது.