துப்பாக்கி நாயகன் செல்வன். சர்வேஷ் வேல் சங்கர்!
Posted on 07/01/2017
துப்பாக்கி வைத்து சுடவேண்டுமென்பது குழந்தையாக இருக்கும் போது தீபாவளியில் துவங்குகிறது. துப்பாக்கி சுடும் விளையாட்டு என்பது உலகளவில் தனி அடையாளம் பொருந்திய ஒரு விளையாட்டு என்றபோதிலும், இந்தியாவிற்கு இது ஒரு முக்கியமான விளையாட்டு.
இதுவரை இந்தியா ஒலிம்பிக்கில் வென்ற 26 பதக்கங்களில் 4 பதக்கங்கள் துப்பாக்கி சுடுதலில் தான் கிடைத்துள்ளது. இன்று பலதரப்பட்ட இளைஞர்கள் தங்களின் அசாத்தியமான திறமைகளை ஒவ்வொரு விளையாட்டின் மீதும் காட்டி வருகிறார்கள். பி.வி.சிந்து, மாரியப்பன் தங்கவேலு, எம்.எஸ்.தோனி என இந்தியாவில் ஏதோ ஒரு மூளையில் இருந்து இன்று உலக நாடுகளையே தங்களின் பக்கம் ஈர்த்துள்ளார்கள். இந்த அடையாளம் அவர்களுக்கு விளையாட்டு அளித்தது தான்.
அந்த வகையில் ஒலிம்பிக் பதக்கமே என்னுடைய கனவு, ஒலிம்பிக்கில் தடம் பதிப்பதே என்னுடைய கனவு என, தன்னுடைய பன்னிரெண்டாம் வயது தொடங்கி, இன்று ஐந்து முறை சர்வதேச அளவிலும், ஆறு முறை தேசிய அளவிலும் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்கள் வென்று குவித்து இளம் வீரராக திகழ்கிறார் செல்வன். சர்வேஷ் வேல் சங்கர் அவர்கள்.
‘துப்பாக்கி சுடுதலில் முதற்போட்டியே மாநில அளவுதான்’ என படபடவென துவங்கின அந்த இளம் வீரர், தம்முடைய அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ‘மற்ற விளையாட்டுகளைப் போல், துப்பாக்கி சுடுதலில் மாவட்ட போட்டிகள் கிடையாது, நேரடியாக மாநில போட்டிகள்தான். அதில் பெறப்படும் மதிப்பெண் கொண்டு ப்ரீ-நேஷனல், பின் நேஷனல்ஸ், வருடத்திற்கு ஆறுமுறை நடத்தப்படும் ட்ரையல்ஸ். பின் ட்ரையல்ஸில் மதிப்பெண் பட்டியலில் முதலில் இருக்கும் எட்டு பேர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு, அதில் முதல் மூன்று இடங்களில் இருப்போரை இந்தியாவை முன்னிலைப்படுத்தி சர்வதேச அளவிளான போட்டிக்கு செல்வார்கள். அதில் தொடர்ந்து நல்ல மதிப்பெண்களை பெற்றுக்கொண்டே இருந்தால் அடுத்து ஒலிம்பிக் ட்ரையல்ஸ். அதில் தேர்ச்சி பெரும் முதல் மூன்று பேர் ஒலிம்பிக்கில் பங்கேற்பார்கள். அதில் இதுவரை ஐந்து சர்வதேச போட்டிகளிலும், ஆறு தேசிய போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை வென்றேன்.
என்னுடைய தந்தை திரு. எஸ்.வி.எஸ்.வேல்சங்கர் அவர்கள் தற்போது மதுரை ரைப்ஃபில் கிளப்பின் செயலாளராக இருந்துவருகிறார். என்னுடைய தாத்தா திரு. எஸ்.வி.எஸ்.சுந்தரமூர்த்தி அவர்களின் காலத்தில்தான் மதுரையில் ரைஃப்பில் கிளப் அறிமுகமாகியது. அவர்களுக்கு அதன் மீது இருந்த ஆர்வம் அவரை அன்று செயலாளராக்கியது. பல போராட்டங்கள், பல முயற்சிகள் கொண்டு, பலரின் உதவியோடு மதுரை ரைப்ஃபில் கிளப் வளர்ந்தது. என்னுடைய தாத்தாவோடு என் தந்தை ரைப்ஃபில் கிளப் சென்று அங்கு பயிற்சி பெறுவதுண்டு. இன்று நான் இந்த ளவிற்கு ஒரு வளர்ச்சியின் பாதையில் சென்று கொண்டிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்னுடைய தந்தை. அவர் தம்முடைய கல்லூரி படிப்பினை முடித்து பல சர்வதேசப் போட்டிகளில் பங்கு பெற்று பதக்கங்களை குவித்தார். அதனை தொடர்ந்து, அன்றிலிருந்து இன்று வரை நூற்றுக்கணக்கான வீரர்களுக்கு பயிற்சியளித்துள்ளார்.
சிறு வயதில் அவருடன் ரைப்ஃபில் கிளப் செல்லும் எனக்கும் அவரைப் போல துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் ஏற்பட்டது. அப்படியே என்னுடைய தந்தையின் பயிற்சியின் ஊடாய் நடத்தப்பட்ட போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை என்னுடைய சிறு வயது முதலாய் பெறத் தொடங்கினேன்.
அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் புனேயில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் ஒரு வெண்கலம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு தங்கப்பதக்கம் வென்றுள்ளேன். இது என்னுடைய ஆறாவது தேசியப் போட்டி. வரவிருக்கும் 2017ம் ஆண்டுக்கான ட்ரையல்ஸ் போட்டிகள் துவங்குகின்றன. அதற்கான ஒரு பயிற்சியில் தற்போது களமிறங்கியுள்ளேன்’ என கூறினார்.
திரு. எஸ்.வி.எஸ்.வேல் சங்கர் அவர்கள்: ‘என்னுடைய மனைவி திருமதி. ஸ்வர்னா வேல்சங்கர், மகன்கள் சுரஜ் சுந்தரசங்கர், சர்வேஷ் வேல்சங்கர், மகள் கேதத்தினி வேல்சங்கர் என அனைவருமே துப்பாக்கி சுடுதலில் பதக்கங்களை வென்றுள்ளனர். தற்போது சர்வேஷ் சர்தேச போட்டிகளில் பங்குபெறுவது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. மதுரை ரைப்ஃபில் கிளப்பில் அதிகமாக பள்ளி மாணவர்கள் பயிற்சிப் பெறுகிறார்கள். தனியாரும் அரசாங்கமும் இணைந்து நடத்தும் ஒரு கிளப் இது. ஒருவர் துப்பாக்கி சுடுதலில் ஈடுபடும் போது அதிகப்படியான கவனமும், கூர்மையான பார்வையும் ஒரு இலக்கை வைத்து செயல்படும் திறனும் அதிகரிக்கும். எனவே, துப்பாக்கி சுடுதலில் ஈடுபடும் மாணவர்களின் கவனச்சிதைவு, ஹைப்பர்-ஆக்டிவ் மாறப்பட்டு, படிப்பில் நல்ல கவனம் கிடைத்துள்ளதாக பல பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும், இன்று, பல்வேறு மாநிலங்களில் அரசாங்கமும், பல நிறுவனங்களும் தங்களின் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நலத்திட்டங்களுக்கும், இது போன்ற இளம்வீரர்களின் விளையாட்டுப் பயிற்சிகளுக்கும் அளித்து வருகிறார்கள்.
இதைக் கடைப்பிடித்து நம்முடைய தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள நிறுவனங்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை அளித்தால் நம்முடைய தமிழக வீரர்களும் தலைசிறந்து விளங்குவார்கள். தற்போது மதுரை ரைப் ஃபில் கிளப்பில் பேப்பர் டார்கெட்ஸ்கள் தான் பயன்படுத் தப்படுகின்றன.
ஆனால் மற்ற மாநிலங்களில் எலக்ட்ரானிக் டார்கெட்ஸ் பயன்படுத்தப்படுகிறது. நம்முடைய வீரர்களும் தேசிய அளவினான போட்டியில் எலக்ட்ரானிக் டார்கெட்ஸ்-யே பயன் படுத்துகிறார்கள். நம்முடைய வீரர்கள், இதற்காகவே போட்டிக்கு 15 நாட்கள் முன்னரே சென்று தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள். வெறும் 15 நாட்களில் கற்றுக்கொண்டு பதக்கங்களை நம் வீரர்கள் வெல்ல முடியுமானால், தினம் தினம் எலக்ட்ரானிக்கில் பயிற்சிப் பெற்றால் நிச்சயம் பல தங்கங்களையே வெல்ல முடியும். ஒரு எலக்ட்ரானிக் டார்கெட்டின் விலையானது சுமார் 5 லட்சம். நம்முடைய மதுரை ரைப்ஃபில் கிளப்பில் 32 டார் கெட்ஸ் தேவையாக உள்ளது.’ என மேலும் கூறினார்.
சர்வேஷ் வேல்சங்கரை வாழ்த்த: 9600333966
Tags: News, Lifestyle, Art and Culture