ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார்!
Posted on 08/07/2022
இன்று காலை துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ உயிர் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள கியோட்டோவிற்கு அருகில் அமைந்துள்ள நாராவில் பிரச்சார உரையின் போது முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மார்பில் சுடப்பட்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது ஒளிபரப்பு NHK தெரிவித்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கான பொதுக்கூட்டத்தில் ஷின்சோ அபே உரையாற்றினார். இன்று காலை உள்ளூர் நேரம் 11:30 அளவில் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் உரை நிகழ்த்தும்போது மயங்கி விழுந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அந்த நேரத்தில் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டதாகவும் இது தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. முன்னாள் ஜப்பான் பிரதமர் சுயநினைவில் இல்லாமல் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டதாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கியோடோ நியூஸ் தெரிவித்தது. தற்போது அவர் உயிர் இழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்துள்ளன.
ஷின்சோ அபே உயிர் இழந்த செய்தி தன்னை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 'எனது அன்பான நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேயின் சோகமான மறைவு குறித்து வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். அவர் ஒரு சிறந்த உலகளாவிய அரசியல்வாதி, ஒரு சிறந்த தலைவர் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க நிர்வாகி. ஜப்பானையும் உலகையும் சிறந்த இடமாக மாற்ற அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.' என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி 2020 இல் பதவி விலகுவதற்கு முன் அபே இரண்டு முறை ஜப்பான் பிரதமராக பதவி வகித்தார். ஆனால் அவர் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் (LDP) கட்சியின் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருந்து அவர் அதன் முக்கிய பிரிவுகளை கட்டுக்குள் வைத்திருந்தார்.
Tags: News